Friday, December 30, 2011

அக்கிலிப்பிக்கிலி

"எங்க இருந்துடா இப்படி ஒரு கொத்தவரங்கா மாதிரி இருக்கிற இவளைப் போய் பிடிச்ச.  உன்னோட ரசனை இந்த அளவுக்கு மட்டமா போயிடிச்சே  ."

"டேய்,எனக்கு என்னானு சொல்லத் தெரியல.பொண்ணுனா அழகா அறிவா இருக்கணும்,அப்படி எதுவும் என்கிட்டே கிடையாது. பொண்ணைப் பார்த்தா நாம அதை பொண்ணா உணரனும்,அவ்வளவு தான். அது எனக்கு இவளைப் பார்த்தப்ப அதான் தோணுச்சு. அதுனால தான் காதலிக்கலாம்ன்னு முடிவு பண்ணினேன்."

என்னுடைய பதிலில் அவன் சமாதானம் ஆகாமல் போனது போலவே எனக்கும் அவளை காதலிப்பதற்கு வேறு சில காரணங்கள் இருந்தது.

என்னை விட உயரமாய் இருக்கும் பொண்ணை எப்படியாவது காதலிக்க வைத்து விட வேண்டும். அப்படி அவள் காதலிக்காமல் போய் விட்டாலும் இவன் போய் என் கூட சுத்துறானே/தொந்தரவு பண்றானே என்கிற எண்ணம் அவளுடைய வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும் என்ற சைக்கோத்தனமான முடிவில் அப்போது இருந்தேன். ஆனால் அதிலும் இவள் எப்படி சிக்கிக் கொண்டாள் என்பது இன்று வரை எனக்கு கேள்விக்குறியாகவே இருக்கிறது.

இப்படியான குழப்பங்களோடு சுமார் ஆறு மாத காலங்களாக காலையில் அவள் வீட்டில் இருந்து  கிளம்புவதில் இருந்து,சாயங்காலம் அவளை வீட்டில் கொண்டு போய் விடும் வரை ஒரு சம்பளம் இல்லாத வாட்ச்மேனாக சுற்றிக் கொண்டு இருந்தேன். என்றென்று அறியாத ஒரு நாள் பொழுதில் அவளை தீவிரமாக காதலிக்கத் தொடங்கியது தான் இவ்வளவு தொல்லைகளை கொண்டு வந்து சேர்க்கும் என தெரியாமல் போனது.

காதலிக்க தொடங்கிய பின்னர் காதலை சொல்லாமல் விடுவது தவறு என்பது காதலால் தோற்றுப் போன நண்பர்களின் காதல்கள் எனக்கு படிப்பினையை கொடுத்து இருந்தது. நேரில் சென்று காதலை சொல்லலாம் என்றால் அவள் எப்பொழுதும் நண்பிகளோடு சுற்றிக் கொண்டே இருக்கிறாள்.

எப்படி காதலை சொல்வது என்று மண்டையை உடைத்து வேறு வழியே இல்லாமல் கடைசியாக ஒரு திருமண பத்திரிக்கையை அடிப்பது (என் பெயரையும்,அவள் பெயரையும் போட்டு தான்) என முடிவு செய்து அவளிடம் எனக்கு கல்யாணம்,நீங்க கட்டாயம் வரணும் என்று அவளிடம் தைரியமாக நீட்டினேன். அவளும் பத்திரிக்கையை பிரிக்காமல் (தொல்லை ஒழிந்தது என்று நினைத்து இருப்பாள் போல) முகமலர்ச்சியுடன் வாங்கிக் கொண்டு கண்டிப்பா வர்றேன் என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டாள்.

வீட்டில் சொல்லி என்னை அடி வாங்க வைத்து இருப்பாள் என்று நீங்கள் நினைத்துக் கொள்ளலாம். ஆனால் அப்படி செய்து இருந்தால் கூட ஒன்றும் பெரியதாக வலித்து இருக்காது. அவள் ஊரை விட்டு எங்கோ போய் விட்டாள் என்பது மட்டும் சில நாட்கள் கழித்து எனக்கு தெரிய வந்தது.

சரி,இன்று இதையெல்லாம் சொல்லி உங்களிடம்  புலம்ப   வேண்டிய அவசியம் என்ன வந்தது என்று கேட்கிறீர்களா? இன்று அவளுக்கு பிறந்த நாள்.இதே மாதிரியான ஒரு பிறந்த நாளில் தான் அவளிடம் போய் பத்திரிக்கையை நீட்டி இருந்தேன்.

ம்ம்..இன்னும் கதை முடியவில்லை. இதை எழுதலாம் என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போது ஒரு மெயில் வந்து இருக்கிறது. அவள் தான் எனக்கு அதே கல்யாண பத்திரிக்கையை அனுப்பி இருக்கிறாள்,நாள் கிழமை வருஷம் மட்டும் மாற்றி விட்டு. 

அக்கிலிப்பிக்கிலி , அக்கிலிப்பிக்கிலி !


Monday, December 12, 2011

ஊளை

தலை முதல் கால் வரை போர்வையால் இழுத்தி போர்த்தி உறங்கி கிடந்த வேளையில் "எந்திரிப்பா,ரொம்ப நேரமா போன் அடிச்சுக்கிட்டே இருக்கு,யாருன்னு தான் பாரு." என்று மெதுவாக கூப்பிட்டுக் கொண்டு இருக்கும் அம்மாவின் சத்தத்தைக்  கேட்டு  தூக்கம் கலைந்த  சலிப்புடன் போனை வாங்கினேன்.



ரம்யா தான் போன் செய்து இருக்கிறாள்.10 மிஸ்டு கால் வந்து இருக்கிறது,எதற்கு இவள் காலையிலே போன் செய்து இருக்கிறாள் என்ற யோசனையிலே "சரிம்மா, நீ காப்பி போட்டு கொண்டு வா." என்று அம்மாவை அனுப்பி விட்டு அவளை கூப்பிட்டேன்.

"ஹலோ மணி ஒன்பது ஆகுது. இன்னும் என்னா தூக்கம் வேண்டி கிடக்கு. சரி,அதை விடுங்க.இன்னைக்கி ஈவினிங் என்னை பொண்ணு பார்க்க வர்றாங்க. என்ன பண்ணுவீங்களோ,ஏது பண்ணுவீங்களோ எனக்குத் தெரியாது. ஒண்ணு இப்போ வந்து என்னை கூட்டிட்டு போங்க,இல்லாட்டி நான் நேரா உங்க வீட்டுக்கே வந்துடுவேன். ஏன்னா இனிமேல் எங்க வீட்லயும் சாக்குபோக்கு சொல்லி சமாளிக்க முடியாது."
"ஏன்மா,நான் துபாயில இருந்து நேத்து நைட் தான் ஊருக்கு வந்து இருக்கேன்.உடனே கோயம்புத்தூர் கிளம்பி வரச் சொல்றியே.வீட்டில என்ன, ஏது, எங்க போறன்னு கேக்க மாட்டாங்களா? இத்தனை நாள் பொறுத்திட்ட,இன்னும் கொஞ்சம் நாள் பொறுக்க முடியாதா,உன்னால? "
"உங்க கிட்ட டீட்டெயிலா  பேச இப்போ நேரம் கிடையாதுங்க. நான் இப்போ ஆபீஸ்ல இருக்கேன்.அஞ்சு மணிக்குள்ள உக்கடம் பஸ் ஸ்டாண்ட் வந்துடுங்க." என்று சொல்லி போனை வைத்து விட்டாள்.


இந்தப் பெண்களே இப்படித் தான்,அவர்கள் சொல்வதைத் தான் நாம் செய்ய வேண்டும் .பெண்ணை பார்க்க வருகிறவன் இன்றேவா தூக்கிக் கொண்டு போய் விடுவான்? ம்,இதெல்லாம் சொன்னாலும் அவளுக்கு உறைக்காது.


அவசரம்,அவசரமாக குளித்து விட்டு சாப்பிடக் கூட நேரம் இல்லாமல் பஸ் ஸ்டாப்புக்கு ஓட்டம் ஓட்டமாக விரைந்தேன். பத்து நிமிடத்துக்கு ஒரு முறை பழனிக்கு செல்லும் பஸ்கள் இன்று அரை மணி நேரமாகியும்  ஒன்றையும் பார்க்க முடியவில்லை.இதற்கு இடையில் ரம்யாவிடம் இருந்து வேறு போன் மேல் போனாக வந்து கொண்டே இருக்கிறது. கிளம்பிட்டேன் என்று சொல்லியும் அவள் விடாமல் தொல்லை செய்யும் போது எதற்குத் தான் இந்த எழவெடுத்த காதல் என்ற எண்ணம் மனதில் அலை பாய்ந்து கொண்டே இருக்கிறது. அடுத்து கூட்டமாக வந்த பஸ்ஸில் ஏறி படிக்கட்டில் தொங்கிக் கொண்டே ஒரு வழியாக பழனிக்கு வந்து சேர்ந்தாகி விட்டது.

பொள்ளாச்சி,கோயம்புத்தூர் என்ற கூப்பாட்டில் வரிசையாக நின்று கொண்டு இருந்த பஸ்களில் முன் நின்றுகொண்டு இருந்த ஒரு பஸ்ஸில் ஏறினேன். போனை எடுக்காமல் இருக்கவும் தொடர்ச்சியாக எஸ்எம்எஸ்களை அனுப்பி துவம்சம் செய்யத் தொடங்கி இருந்தாள் ரம்யா.சன்னலோரத்தில் அமர்ந்து கொண்டு முதல் வேலையாக போனை அணைத்து வைத்தேன். இவளால் பஸ்ஸில் இருக்கும் அழகான பெண்களை கூட சைட் அடிக்க முடியாமல் போகிறது.


'ஏங்க,இது பொள்ளாச்சி போகுமாங்க' என்று கேட்டுக் கொண்டே பதிலுக்கு எதிர்பாராமல் மஞ்சப் பையுடன் வயதான ஒருவர் அருகில் அமர்ந்தார். பஸ் பழனியைத் தாண்டி விரைவாக சென்று கொண்டு இருந்தது.


 "தம்பி,இந்தாங்க முறுக்கு.சாப்பிடுங்க.என்னோட தங்கச்சி ஆசையா செய்து கொடுத்தது." என்றவரிடம் "இல்லைங்க அண்ணா,நீங்க சாப்பிடுங்க.நான் இப்போ தான் சாப்பிட்டேன்." என்றேன். இருந்தாலும் ஆசையாய் கள்ளங்கபடமின்றி என்னிடம் கொடுக்க வைத்த அவர் மனது என்னவாகி இருக்கும் என்ற உணர்வில் "நீங்க எந்த ஊருங்க,என்னா பண்றீங்க" என்று பேச்சை கொடுத்தேன்.


"எனக்கு எந்த ஊர்ன்னு சொல்றதுன்னு தெரியலைங்க. நான் பிறந்தது,அரவாக்குறிச்சி பக்கம். நான் சின்னப் பயலா இருக்கும்போதே என்னோட அப்பா இறந்திட்டார். தம்பி,தங்கச்சிகளை படிக்க வைக்கணும் அப்படிங்கிறதுக்காக கேரளா போனேங்க. இப்போ கோழிக்கோட்டுல  முப்பது வருஷம் ஆச்சுங்க. சொந்த வீடு இருக்கு.கல்யாணம் ஆகி பிள்ளைகுட்டிகள் எல்லாம் இருக்காங்க.தங்கச்சி பொண்ணுக்கு காதுகுத்து.அதான் இங்க வந்திட்டு போறேங்க."


"இங்க இருந்து போயி இந்த அளவுக்கு நல்லா வந்து இருக்கீங்கன்னா ரொம்ப சந்தோசங்க. இப்படி வரவும் போகவும் எத்தனை நாள் ஓட்டுவீங்க. ஊர் பக்கம் வந்து செட்டில் ஆகலாமே? " 


"எனக்கு மட்டும் ஆசை இல்லையாங்க. நான் கொத்தனாரா வேலை பார்க்கிறேங்க. இங்க இருந்து நிறையப்  பசங்களை வேலைக்கு கூட்டிட்டு போறேன். எனக்கு ஒரு பையன்,ஒரு பொண்ணு. பையனுக்கு படிப்பு ஏறாம என் கூடவே வேலை பார்த்தான். பொண்ணு நல்லா படிக்குதுங்க. அதை மட்டும் நல்லா படிக்க வச்சிட்டா போதுங்க. அதை மட்டும் நம்ம பக்கம் கட்டிக் கொடுத்து ஊர் பக்கம் வந்திடலாம்ன்னு இருக்கேன்.பையன் மட்டும் ஒழுங்கா இருந்து இருந்தா நான் இப்படி எல்லாம் யோசிக்க வேண்டியது இல்லைங்க. நான் சொல்லி சொல்லிக் கேக்காம மலையாளத்துக்காரங்க பொண்ணை கட்டிக்கிட்டு வந்திட்டான். என்னோட பொண்ணு இப்போ தான் டென்த் படிக்கிறாங்க.வீடு சின்னதா இருக்கு. இதெல்லாம் அவனுக்கே புரியணும்." என்று தன்னை அடக்க முடியாமல் உளறி விட்டோம் என்ற பரிதவிப்பில் சிறிது நேரம் அமைதி ஆகி அப்படியே உறங்கத் தொடங்கி இருந்தார்.


நானும் இதற்கு மேற்கொண்டு பேசுவது சரியாகப்  படாமல் ரம்யாவைப் பற்றிய நினைப்பில் தூக்கமும் வராமல் கடந்து செல்லும் மரங்களை பார்த்துக் கொண்டே இருந்தேன்.பஸ் பொள்ளாச்சியை நெருங்கிக்  கொண்டு இருந்தது. 


போன் அடிக்கும் சத்தம் கேட்டது.அனிச்சை செயலாக என்னுடைய சட்டைப்  பையை பார்த்து விட்டு,அடிப்பது அருகில் அமர்ந்து இருப்பவரின் செல் என்று தெரிந்து உறங்கிக் கொண்டு இருக்கும் அவரை எழுப்பினேன். அயர்ச்சியுடன் எழுந்த அவர் போனை எடுத்து ,"எப்படி இருக்கீங்க," என்று ஆரம்பித்தவர் முகம் சிறிது நேரத்தில் இருண்டு போயி வெளிறத் தொடங்கியது. பேச்சு மூச்சு இன்றி எதிரில் சொல்வதை கேட்டுக் கொண்டு இருந்தவர் பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் பஸ் நிற்கும் முன்னரே வண்டியில் இருந்து இறங்கத் தொடங்கினார். ஏதோ நடக்கக் கூடாத ஒன்று  நடந்து இருக்கிறது என்பதை மட்டும் உணர்ந்து நானும் அவரை பின் தொடர்ந்தேன்.


"அண்ணே,என்னங்கண்ணே ஆச்சு. சரி,வாங்க.டீ சாப்பிடுவோம்" என்று சொல்லி அவரை இழுத்துக் கொண்டு கடைக்குச் சென்றேன். தண்ணியை கொடுத்து முகம் கொப்பளிக்க வைத்த பின்னர் ஒரு வித நிதான நிலைக்கு வந்தார். 


"தம்பி,உங்க கிட்ட எப்படி சொல்றது. ம்ம்,என்னோட பொண்ணு இரண்டு நாளா வீட்டுக்கு வரலையாம். என் சம்சாரம் இது வரைக்கும் சொல்லாம இப்போ தான் சொல்றாங்க. பக்கத்து வீட்டு பையன் ஒருத்தனையும் காணோம். எனக்கு மட்டும் ஏன் தம்பி,இது மாதிரி நடக்குது. காதலிச்சு ஓடிப் போற வயசா அவளுக்கு  இது? நான் என்ன பாவம் பண்ணினேன்." என்று சொல்லும்போது தேம்பத் தொடங்கி விட்டார். ஆறுதல் சொல்லவோ,பதில் சொல்லவோ இயலாமல் நானும் அவரைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். சிறிது நேரம் கழித்து அவர் சிறிது தணிந்து இருப்பதைக் கண்டு  "சரி வாங்கண்ணா,பாலக்காடு பஸ் கிளம்புது,பாருங்க. நீங்களே இப்படி இருந்தா அங்க உங்க வீட்டுக்காரம்மா  நிலைமையை நினைச்சுப் பாருங்க. வீட்டுக்கு போயி எனக்கு போன் பண்ணுங்க. " என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தேன்.


ஏன் எனக்கு மட்டும் இவ்வாறு நிகழ்கிறது? எனக்கே ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும்போது என்னிடம் வருபவர்களும் அவர்களுடய துன்பங்களை  ஏன் சொல்லத் தொடங்குகிறார்கள் அல்லது நான் ஏன் செவி மடுத்து கேட்கிறேன்? சற்று நேரத்துக்கு முன் பரிச்சயமான அவரின் நிலையைக் கண்டு இப்போது எனக்கும் ஏன் காதலுக்காக வீட்டை விட்டு ஓட வேண்டும் என்ற எண்ணம் தலைதூக்க தொடங்கி இருந்தது. 

காதலிப்பவர்களுக்குத் தான் வலிக்க வேண்டும் இல்லையா,எனக்கு ஏன் தேவை இல்லாமல் வலிக்கிறது இப்போது ? சரி,வருவது வரட்டும்... நான் போகா விட்டாலும் ரம்யாவின் காதலன் ரமேஷ் அவளை கூப்பிடப் போவான் இல்லையா என்ற எண்ணத்தில் கோயம்புத்தூர் செல்லும் முடிவை கைவிட்டு பழனி செல்லும் பஸ்ஸை நோக்கி  நடக்கத் தொடங்கி இருந்தேன்.

Sunday, December 4, 2011

சாதிமான்கள்

 சாதிமான் : 1
"என்னண்ணே,கடையில வந்து சாப்பிட்டுக்கிட்டு இருக்க. வீட்டுல மச்சி இல்லையா? "
"டேய் தம்பி,எப்படா வந்த?அட உனக்கு விஷயம் தெரியாதா? "
"ஏன்னே?என்னா விஷயம்?"
"அது ஒண்ணும் இல்லப்பா. நம்மூர் பஞ்சாயத்து எலெக்சன் நடந்ததுல.அதுல நின்ன சக்கிலியப் பையன் ஒருத்தன்  ஓட்டுப் போடறதுக்காக வீட்டுல காசை கொடுத்துட்டுப்  போய் இருக்கான். இந்த சாதி கெட்ட சிறுக்கி மகளும் அதை வாங்கி இருக்கா. தூக்கி எறிஞ்சு இருந்தாவுல சாதிமகள். அதான் ஒங்க அப்பன் வீட்டுக்கு போடின்னு அடிச்சு விரட்டிட்டேன். " .
சாதிமான் : 2
"ஏன்மா, நான் இங்க விசேசத்துக்கு வந்து இருக்கேன். இங்க கறி போடுறாங்க. ரெண்டு,மூணு வாரமா கறி சாப்பிடாம ஒரு மாதிரி இருக்கு,சாப்பிடட்டுமா?"
"பள்ளப் பய வீட்டு விசேசத்துக்கு போயிட்டு சாப்பிடலாம்ன்னு வேற கேக்கிறியா? வெறி பிடிச்சுப் போச்சுன்னா கடையில,கிடையில வாங்கித் திங்க வேண்டியது தான,மானங்கெட்ட ஜென்மங்க அப்படித் தான் இருக்கும். சரி,அங்க உன்கூட வந்து இருப்பாங்களே,அவிங்க என்ன செய்றாங்களே அதை செஞ்சு தொலை."
அரை மணி நேரம் கழித்து வீட்டுக்கு வேகமாக வந்தவன்,"என்ன இருக்கு,சீக்கிரம் சோறைப் போடு.பசிக்குது."
"ஏன்யா விசேச வீட்டுல திங்கலையோ.இங்க வந்து இந்த குதி குதிக்கிற?"
"எங்க,நாங்க மொய் வச்சிட்டு சாப்பிட போகலாம்ன்னு நிக்கிறோம். சம்சாரிக எல்லாம் எங்க இங்க சாப்பிட போறாகன்னு நினைச்சுக்கிட்டு கலரை கொண்டு வந்து குடிக்க கொடுத்திட்டான்.அதுக்கு அப்புறம் நாங்க எப்படி சாப்பிட போறது.அதான் அப்படியே வந்திட்டோம்."



Friday, October 28, 2011

துரத்தும் நிழல்கள்

ஒரு இனிமையான மாலை நேரத்தில் ரெஸ்டாரன்ட் ஒன்றில் நீங்களும்,உங்கள் காதலியும் தேநீரை  உறிஞ்சிக் கொண்டு பேசக் கூட தோன்றாமல் வெகு நேரமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள். அவளை பார்க்காத இந்த இரண்டு,மூன்று வருடங்களும் போனிலும்,சாட்டிலும் பேசி தீர்த்து விட்டதால் அவளை பார்த்துக்  கொண்டு இருப்பதே பேரானந்தமாக இருந்தது. அந்த நேரத்தில் உங்களுக்கு இடையில் ஒருவன் வந்து "இவ ரொம்ப அழகா இருக்காள்ல" என்று உங்களிடம் கேட்டால் எப்படி இருக்கும்? எனக்கும் அப்படித் தான் கோபம் பொத்துக் கொண்டு வந்து அவனை அடிக்கப் போனேன். ஓங்கிய கையை பிடித்துக் கொண்டு என் காதலியைப் பார்த்து அவன் கேட்டான். "நியாயமா பார்த்தா எனக்கு வர வேண்டிய ஆத்திரம் இவனுக்கு ஏன் வருது,யாருக்குடி நீ பொண்டாட்டி? ". எனக்கு இரண்டு மூஞ்சியையும் நேரில் பார்க்கும் தைரியம் இல்லாமல் போயி என்ன செய்வதென்று விழித்தேன். 


இதன் பிறகு எனக்கு என்ன நேர்ந்தது என்று நீங்கள் மூளையை கசக்குவதை விட அடுத்த நாள் காலை செய்தித் தாள்களில் அவர்கள் இருவரும் இறந்து போனதாய் வந்து இருந்த செய்தியை நீங்கள் படித்து இருக்கலாம். போலீஸ் மட்டுமல்ல ஏன் நீங்களும் கூட குப்புறப்படுத்துக் கொண்டு யோசிக்கலாம். ஏனென்றால் நானும் இப்பொழுது அதைத் தான் செய்து கொண்டு இருக்கிறேன். இவன் கனவுகளை காவு கொடுத்தவன் !

Friday, October 14, 2011

உடையும் பிம்பங்கள்

எதையும் சட்டை செய்யாமல் அலட்சியத்துடன் நோக்கும் மனப்போக்கால் என்னுடன் உறவாட முடியாத துயரத்துடன் இரண்டு கைபேசிகளும் செயலிழந்து கிடைக்கின்றன. காதலியோ,மனைவியோ ஏன் தோழி கூட இல்லாமல்  தனியனாய் இருப்பதை நான் உணராத அளவுக்கு இயல்பில் நடத்தி வைத்துக் கொண்டு இருந்தவை இவையே. பண மதிப்பினை விட இத்தனை ஆண்டுகளாக சேர்த்து வைத்து இருந்த தொடர்புகளை தேடிக் கண்டுபிடிக்க வேண்டுமே என்ற எண்ணமே பெரும் வேதனையை உண்டாக்கிக் கொண்டு இருக்கிறது.

வீட்டில் விசயத்தை இரண்டு நாள் சொல்லாமல் தள்ளிப் போட்டாலும் பேசும்போது உண்மையை சொல்லி விடும் படி ஆகி விட்டது. "சரி விடுப்பா, தலைக்கு வந்தது.தலைப்பாகையோடு போச்சுன்னு நினைச்சுக்க. ஜோசியக்காரன்  வேற உனக்கு ஏற்கனவே தண்ணியில கண்டம் இருக்குன்னு சொல்லி இருக்கான்.வேலைக்கு போற பக்கம் பார்த்து சூதானமா இருக்கணும்" என்ற அம்மாவின் அக்கறையான பாச வார்த்தைகளில் மன பாரம் லேசாக இறங்கியது போல இருந்தது.

பசித்தாலும் பசிக்க விட்டாலும் நேரம் தரும் உந்துதலும்,நண்பர்களின் நச்சரிப்பும் சாப்பாட்டு கடை நோக்கி நகர வைத்தது. சாப்பிட்டு எந்திரிக்கும்போது பெல்ட் பக்கிள் உடைந்து கீழே விழுந்தது. எதன் மீது இருந்த கோபமோ சாப்பாட்டின் பக்கம் திரும்பி இருப்பது தெரிந்தது.

பெல்ட்டு போனது செல்போனை நினைக்கையில் ஒன்றுமில்லாமல் தோன்றியது. உண்ட மயக்கத்தில் தூங்கி எழுந்த நேரத்தில் தேய்க்க கொடுத்து  இருந்த துணிகளை வாங்க லாண்டரி கடையை  நோக்கி செல்ல வேண்டி இருந்தது. கடையை நெருங்கும் முன் செருப்பு பிய்ந்து விழுந்தது. இழுத்துக் கொண்டே கடை வரை சென்று விட்டேன்.

"பாய் சாப், கப்டா கராப் கொகயா..ஆப் சாந்தி கரோ..மேய் பைசா தேதேகா".

எத்தனையோ போய் விட்டது. இந்த ஒரு சட்டைக்கு இவரிடம் பணம் வாங்கியா நமக்கு நிறையப் போகிறது என்கிற நினைப்பில்"முஸ்கில் நகி பாய்,டிகே" என்று சொல்லி விட்டு நடையைக் கட்டினேன். 

செல்லை விடுவோம்,அது என்னுடைய கொழுப்பு. ஏன் நன்றாக இருந்த மத்த மூன்றும் சொல்லி வைத்தது போல ஒரே நாளில் இப்படி ஆகிப்போனது? நான் தொலைந்து கொண்டு இருப்பதாக எனக்கு தோன்றியது இப்பொழுது நிஜமாகவே நடக்கத் தொடங்கி இருக்கிறதா?

புதியதாக ஒரு செல்லை வாங்குவதற்குள்  குழப்பங்களும்,அலைச்சலும்,கிண்டலும் கேலியுமாக மூன்று,நான்கு  நாட்கள் கடந்து போய் இருந்தது. எவருடைய தொடர்புகள் இல்லாமல் போய் இடைப்பட்ட நாட்களில் என்னை அழைத்து இருந்தவர்கள் பற்றிய ஒன்றன் பின் ஒன்றாக செய்திகள் வரத் தொடங்கி இருந்தது. தெரிந்தவர்களிடம் உடனடியாக பேசி விட்டு +22 கண்ட்ரி கோட் உடன்  வந்த நம்பர்  யாராக இருக்கும் என்று யோசிக்கையில் தான்சானியாவில் இருக்கும் வெங்கட்டாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டே கூப்பிட்டேன்.

"சலாம் அலைக்கும் சாதிக்,கேபாலக்.அனா அப்துல்லாஹ்."

"ஜேன்,தமாம்..மாபி மாலும் அரபிக்... கேன் யூ ஸ்பீக் இன் இங்க்லீஷ் "

"ஓகே. நோ ப்ராப்ளம்... ஆர் யூ முஸ்லிம்?"

"நோ."

"என் நண்பனே,உன்னைக்  கொல்வதற்காக ரெண்டு ஆண்களும்,ஒரு பெண்ணும் தீவிரமாக அலைந்து கொண்டு இருக்கின்றனர். இது எனக்கு எப்படி தெரியும் என்று கேட்காதே. கடவுள் தான் நம் இருவருக்குள் ஒரு வித பிணைப்பை உருவாக்கி இருக்கிறார். நீ பிழைக்க வேண்டும் என்றால் சொல்,நான் உனக்கு உதவ தயாராக இருக்கிறேன். முதலில் போய் பசியில் இருக்கும் ஒருவனுக்கு ரொட்டி ஒன்றை கொடுத்து விட்டு வந்து அப்புறம் என்னிடம் பேசு." என்று சொல்லி  போனை வைத்து விட்டான்.

ஒரு மணி நேரம் கழித்து அவனிடம் பேச முயற்சித்த போது இணைப்பு கிடைக்கவில்லை.

 லாட்டரி அடித்து இருக்கிறது,பணம் தருகிறோம்.இப்போது பணம் கொடு என்று தான் ஏமாற்றுவார்கள். இது என்னங்கடா, புதியதாக உயிரைப் பற்றி எல்லாம் பேசுகிறார்கள் என்று நண்பர்களிடம் புலம்பத் தொடங்கி இருந்தேன். " நீ எல்லாம் எதுக்கு உயிரோட இருக்க,பேசாம செத்து போயிடு" என்று சாதாரணமாக நண்பன் சொல்வது கூட அன்று பயத்தை இன்னும் அதிகப்படுத்தி விட்டது.


கார் 120 கிலோமீட்டர் வேகத்தில் சென்று கொண்டு இருக்கிறது. சுழன்று அடிக்கும் புழுதிப் புயலால் முந்தியோ,கடந்து செல்லும் வாகனங்களையோ,வானுயுர நிமிர்ந்து நிற்கும் கட்டிடங்களையோ காண முடியாமல் அருகில் இருப்பவர்கள் புலம்பிக் கொண்டு இருக்கின்றனர்.மழை வருவது போல இருக்கிறது.

என்னை மறைத்து இருக்கும் கண்ணாடியின் வழியாக நீ கை அழைத்து கூப்பிடுவது என்னால் காண முடிகிறது. 
ரேவதி,ரேவ்,ரேவி,ரே,... ம்ம், இன்னும் எப்படி அழைத்தால் உனக்கு கேட்கும்? நேற்றைய தூக்கமற்ற இரவு  கூட  உன்னையும் என்னையும் பற்றிய கேள்விகளால் நீண்டு கொண்டே இருந்தது. நீயும் நானும் கவிதைகளாய் பேசியது எல்லாம் இன்று வெறும் புனைகதைகளாய் மட்டுமே உலாவித் திரிகிறது. உனக்கு அது காதையாகவும்,எனக்கு மிகப் பெரும் வாதையாகவும் இருக்கிறது.

இனிமேல் எதையும் இழக்கும் அளவுக்கு எனக்கு மன திடம் இல்லை.என் இதயமும் கண்ணாடியால் ஆனது. எவ்வளவு கடினமாக தோற்றம் அளிக்கிறதோ அதற்கு எதிர்ப்பதமாக  மிக எளிதில் நொறுங்கக்  கூடியது. ஆகவே கண்ணாடியைக் கடப்பது ஒன்றும் எனக்கு பெரிய விஷயம் இல்லை. 

கண்ணாடி உடையும் போது அதன் பிம்பங்களாக  நானும் வீழ்கிறேன். சாலையில் என்னுடைய உடம்பில் இருந்து இரத்தம் ஆறாக வழிந்து ஓடிக் கொண்டு இருக்கிறது. என் மேல் சில கண்ணாடி துண்டுகள் சிதறிக் கிடக்கின்றன. செத்த காக்கையை சுற்றி மற்ற காகங்கள் வட்டமிடுவதை போல சுற்றி இருப்பவர்கள்  கண்ணீர் வடிக்கின்றனர். இதை காண சகியாமல் தூரத்தில் நின்று கொண்டு அழுகும் அந்த ஆப்ரிக்கனை தேற்றத் தான் யாரும் இல்லை. ஏன் நானும் கூட இல்லாமல் போனேன் ! ! ! 




Saturday, September 3, 2011

என்னால் ஆவதோ,அழிவதோ ஒன்றுமில்லை !

விமானம் இன்னும் இரண்டு மணி நேரம் கழித்துத் தான் கிளம்பும் என்ற அறிவிப்பினால் வந்த எரிச்சலும் கூட இதுவரை பட்ட பாட்டை நினைக்கும் போது ஒன்றும் பெரியதாக தோன்றவில்லை. அங்குமிங்கும் பராக்கு கூட பார்க்கத் தோன்றாமல் நாற்காலியில் சாய்ந்து கிடந்தேன். தனக்கு பின்னால் இருப்பவர் யாரோ தன்னை உற்றுக் கவனிப்பது போன்ற உள்ளுணர்வு எந்த பின் நோக்கி திரும்பி பார்த்தேன்.  கன்னியாஸ்திரி சீருடையில் ஒரு 25-30 வயது தோற்றம் உடைய தென்னிந்திய சாயலில் இருக்கும் ஒரு பெண் அமர்ந்து இருந்தார்.


நான் திரும்பி பார்த்ததை கண்டு விட்ட அப்பெண் “ஏங்க நீங்க தமிழா?” 


“ஆமாங்க,நான் தமிழ்நாடு தான். சொந்த ஊர் திண்டுக்கல்.  ஆமா,நீங்க எந்த ஊர்?”  


“எனக்கு சென்னை தான் சொந்த ஊர். நீங்க போனில் பேசிக்கிட்டு இருந்ததை வச்சு நீங்க தமிழாத் தான் இருப்பீங்கனு நெனச்சுத் தான் கூப்பிட்டேன். திண்டுக்கலா,எனக்கு நல்லாத் தெரியும். அங்க இருக்கிற பெஸ்கி காலேஜுக்கு நான் வந்து இருக்கேன். எனக்கு பிடிச்ச ஊர்.”


“ஓ,அப்படிங்களா,ரொம்ப சந்தோசம்.இந்த ஊர்ல எவ்ளோ நாளா இருக்கீங்க?”


”நான் இங்க 5 வருசமா இருக்கேன். எங்க சபை மூலமா அனுப்பி வச்சாங்க. என்னை மாதிரி இங்க இன்னும் பத்து பேரு இருக்காங்க.ஸ்கூல் மூலமா பசங்களுக்கு பாடம் நடத்துறோம். நீங்க எவ்ளோ நாளா இங்க இருக்கீங்க?”
“5 வருசமா? ஊர் பக்கம் போகவே இல்லையா? இங்க கம்பெனி வேலை விசயமா வந்து இரண்டு மாசம் இருக்கவே பயங்கர கடியா இருக்கு.நீங்க பெரிய ஆள் தான்.”
“ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமாத் தான் இருந்தது. அப்புறம் இதுவே எங்களுக்கு பழகிடிச்சு. ஸ்கூலில் பசங்க கிட்ட இருக்கும்போது அப்புறம் நாங்க பத்து பேரும் வேற மொத்தமா இருக்கிறதால ஒண்ணும் தெரியல.5 வருஷம் இப்படியே ஒடிடிச்சு.”
“ஓ,ஓகே.. அந்த அளவுக்கு பரவாயில்லை. ஊருக்கு போயிட்டு மறுபடியும் வருவீங்களா?இல்லை தமிழ்நாடு தானா?”
“இல்ல,இனிமேல் தமிழ்நாடு தான்.அனேகமா சபையில இன்னும்  மேலே  படிக்க வைப்பாங்க.”
எதிர்பார்த்ததை விட விரைவாகவே விமானம் வந்து விட்டது.ஒவ்வொருவராக விமானத்தின் உள்ளே செல்லத் தொடங்கினர்.”சரிங்க,பார்ப்போம்” என்று சொல்லி விடைபெற்றுக் கொண்டேன்.
விமானத்தின் உள்ளே இருவரும் வேறு வேறான இடங்களில் அமர்ந்து இருந்ததால் பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை. சரி,சிங்கப்பூரில் இறங்கும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து கொண்டு உறங்கி விட்டேன்.  சிங்கப்பூரில் இறங்கிய பின் நண்பனுடன் போனில் பேசிக் கொண்டு இருந்த முனைப்பில் அந்தப் பெண்ணை தவற விட்டு விட்டேன். அப்பெண்ணோ சென்னை செல்ல வேண்டியவர்.நான் சிங்கப்பூரில் உள்ள நண்பன் வீட்டுக்கு வேறு செல்ல வேண்டும். சரி அவ்ளோ தான் இனி எங்கு போய் பிடிப்பது,பார்ப்பது?
நிறைவுறாத பேச்சுக்களால் ஆறு மாத காலம் கடந்து இருந்தாலும் இன்னும் அப்பெண் என் மனதிலே வந்து போயிக் கொண்டு இருக்கிறார். எதை சாதிக்க,நிறுவிட,துறந்து விட  இந்தப் பெண் இப்படி வீட்டை விட்டு வந்து 5 ஆண்டு காலமாய் இங்கு இருக்கிறார்? எது அவரை இங்கு துரத்தி இருக்கும்? இப்போது அந்த பெண்ணின் மீது மரியாதை வருவதற்கு பதிலாய் ஒரு வித இரக்கமும்,வேதனையுமே மட்டுமே இருக்கிறது.
இன்று காலை அதிசயமாய் நண்பன் ஒருவனிடம் இருந்து மெயில் வந்து இருக்கிறது. “சாரிடா மாப்ள,எனக்கு திடீரென கல்யாணம் முடிவு செஞ்சுட்டாங்க.பத்திரிக்கை அடிக்கலாம் நேரம் இல்லை.பொண்ணு போட்டா அனுப்பி இருக்கேன்,பார். பார்த்திட்டு சொல்றா,உன்னோட சிஸ்டர் எப்படி இருக்காங்ன்னு...  ஆஸ்திரேலியாவில அஞ்சு வருஷம் வேலை பார்த்து இருக்காங்க. ஆனா இனிமேல் வீட்டில் இங்க தான்.”
அந்தப் போட்டாவைப் பார்த்த பின்னர் இன்னும் சில ஆண்டுகளுக்கு இருவரையும் நேரில் சந்தித்து விடக் கூடாது என்று மட்டும் மனதில் நினைத்துக் கொண்டேன். என்னால் ஆவதோ,அழிவதோ ஒன்றுமில்லை !



Wednesday, July 27, 2011

ஜெயலலிதாவை அம்மா என்று அழைக்காதீர்கள்

கட்சி என்ற சொல்லை குடும்பச் சொத்தாகவும், அரசியல் என்ற சொல்லை கொச்சையாகவும், ஊழல் என்ற சொல்லை பிரபலப்படுத்திய கருணாநிதிக்கு ஒரு அரசியல்வாதியாக  அதைச் செய்ய உரிமை இருக்கிறது.அதற்கு பிரதிபலனாக நிறைய அனுபவித்துக் கொண்டும் இருக்கிறார். அதே நேரம் அதற்கு போட்டியாக அடக்குமுறை  என்ற ஆயுதத்தால்  அனைவரையும் கட்டுக்குள் ஒரு வித பதற்றத்திலே வைத்து இருக்கும் ஒரு எதேச்சதிகார ஆணவப்போக்கு கொண்ட பெண்மணியை,ஒரு பெண் என்பதற்காக ஜெயலலிதாவை "அம்மா" என்று அழைப்பது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல,அதற்கு அவர் எந்த வகையிலும் உரியவராக நடந்து கொண்டதே இல்லை. துதிபாடிகள் எல்லாம் தலைவன்,தலைவி என்று தான் குரல் கொடுப்பார்கள். எம்.ஜி.ஆர். , கருணாநிதி  தலைவர் என்று தான் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள். ஏற்கனவே மாமா,மச்சான் போன்ற உறவுச் சொற்கள் வேறு தொனிகளில் தான் பயன்படுத்தப்படுகிறது. உங்களுக்கு பிடித்தால் "புரட்சித் தலைவி" என்று அழையுங்கள். 'காவிரித் தாய்', 'மகாமகத் தாய்', 'ஈழத் தாய்' என்று புகழவும் செய்யுங்கள்.இதை  அரசியல் ரீதியாக கூறாமல் உணர்வு அடிப்படையிலே  கூறுகிறேன். தயவு செய்து "அம்மா" என்று சொல்லுக்கு மட்டும் அகராதியில் புது விளக்கங்கள் சேர்க்காதீர்கள் !  

Wednesday, July 20, 2011

போவதும்,வருவதும் காதல்

நான் ஏன் அன்று அவளிடம் அந்த அளவிற்கு மூர்க்கமா நடந்து கொண்டேன். என்ன இருந்தாலும் நான் அவளை அடித்து இருக்க கூடாது? இப்பொழுது புலம்பி மட்டும் என்ன புண்ணியம்,அது சரி இந்தப் பையனை விட்டுப் போக  அவளுக்கு எப்படி மனசு வந்தது? இப்போது அவளை அடித்ததில் தவறு இல்லை என்றே படுகிறது.

நான் உன்னை திருமணம் செய்வதற்காக நீ சார்ந்து இருக்கிற மதத்தைப் படித்து,தழுவினேன். எங்கள் வீட்டிலும் பையன் சந்தோசம் தான் முக்கியம் என்று நமக்கு ஒரு மறுப்பும் சொல்லவில்லையே.அந்த பெருந்தன்மை உன்னிடம் ஏன் இல்லாமல் போனது? நம் மகனுக்கு ஒரு விசேச நாளில் சந்தனமும்,குங்குமமும் வைத்து விட என் தாய்க்கு உரிமை இல்லையா? அது உனக்கு பிடிக்காமல் இருக்கலாம்.அதை நீ வீட்டில் வந்து என்னிடம் சொல்ல வேண்டியது தானே? என் தாயின் கண்  முன்னே அதை அழித்துக் காட்டி என்ன சாதிக்கப் போகிறாய்?  நம் மகன் நீ நம்பும் மதத்தையே வழிபடட்டும்.எனக்கு அதைப் பற்றிய கவலை இல்லை. உனக்கே தெரியும்,நான் எந்த மதத்தையும் நம்புவன் அல்ல. நிலைமை அப்படி இருக்க ஏன் நீ இப்போதெல்லாம் வெறி பிடித்தவள் போல நடந்து கொள்கிறாய்?


நாம் நம்பாத ஒன்றை ஏற்றுக் கொண்டதில் நான் என்ன பெரிதாக விட்டுக் கொடுத்து இருக்கிறேன். நானும் அவளை அங்கே அடித்து இருக்க கூடாது. அது என் மிகப்பெரிய தவறு தான். என்னை நம்பி அவளுடைய வாழ்க்கையையே ஒப்படைத்து இருக்கிறாள்.அம்மாவை சமாதானப்படுத்தி கொள்ளலாம். அவள் எங்கு போயி இருப்பாள் ? பையனை அம்மா வீட்டில் விட்டு விட்டு அவளை தேடத் தொடங்க வேண்டும்.

யாரோ பொடனியில் அடிப்பது போல இருந்தது.

"என்னப்பா,மாஸ் முடிஞ்சு நான் இங்க வந்து அஞ்சு நிமிசமா நிக்கிறேன். எந்த லோகத்தில் இருக்க நீ இப்போ. உன்னைய  நம்பி எப்படிடா என் கழுத்தை நீட்டுவது?"?? .

Monday, July 4, 2011

யாராய் இருப்பாள் அவள் !

இரைச்சலுடன் வந்து நின்ற அரசுப் பேருந்தில் கூட்டம் குறைவாக இருப்பது போல் தென்படவும் பின் வாசலில் ஏறி காலி இருக்கையைத் தேடி முன்னே நகர்ந்து கொண்டு இருந்தேன். "எங்க போறீங்க,டிக்கட்டை எடுத்திட்டு முன்னாடி போங்க"  என்ற கண்டக்டரிடம் சீட்டை வாங்கி கொள்ளும்போது சிட்கோ கேட் வந்து விட்டது. ட்ரைவருக்கு பின் புறம் இருந்த  மூன்று பேரும் அமரும் சீட்டில் ஒரு பெண் மட்டுமே அமர்ந்து இருந்தாள். கண்டக்டரிடம் சொல்லச் சொல்லி மாறி உக்காரச் வைக்கலாம் என நினைத்தால் ஆள் கடைசி சீட்டுக்குச் சென்று பணத்தை எண்ணத்  தொடங்கி இருந்தார். எப்படி கேட்பது என்ற தயக்கத்தில் இருந்தாலும் ஆபத்துக்கு  பாவம்  இல்லை  என்ற கணக்கில் "ஏங்க,கொஞ்சம் மாறி உக்கார முடியுமா? " என்றேன்."பரவாயில்லை,நீங்களும்  இங்கேயே  உக்காருங்க " என்று சொல்லி விட்டு சன்னலோரத்துக்கு  அவள் மாறினாள்.சார்ஜ் இல்லாத மொபைல்,பண்பலை வானொலி,விஜய் படம்,புத்தகம் இப்படி எதுவும் இல்லாமல்  மதிய நேர  புழுக்கம் வேறு சேர்ந்து கொண்டு பெரும் அவஸ்தையாக இருந்தது.நம்மை மதித்து அருகில் அமர வைத்து இருக்கிறாள் என்ற எண்ணத்தில் சைட் கூட அடிக்கத் தோன்றாமல் முன்னோக்கி பார்த்துக் கொண்டே இருந்தேன். யாராவது பொள்ளாச்சியில் இறங்கினால் சன்னலோரமாக இருக்கிற வேறு ஒரு சீட்டுக்கு மாற வேண்டும்.


யார் கெட்ட  நேரமோ பொள்ளாச்சியில் ஒருத்தரும் இறங்கும் பாட்டைக் காணோம்,வெளியில் நிற்கும் மக்களும் தனியார் பஸ்சுக்கு காத்துக் கொண்டு தான் நிற்கின்றனர்.இப்போது காற்றுக்காகவும்,கண் வறட்சிக்காகவும் கண்ணை அவள் இருக்கும் பக்கம் திருப்ப வேண்டி வந்தது. அவள் சில புத்தகங்களுக்கு மேலாக  கைபேசியை வைத்து விளையாடி கொண்டு இருக்கிறாள்.கல்லூரியில் படிக்கிற பாவனையில் இருந்தாள். விடுதியில் இருந்து விடுமுறைக்கு வீட்டுக்கு செல்பவளாக இருக்கக் கூடும். அவசியமற்ற இவைகளை விட அவள் என் கண்களுக்கு மிகவும் அழகாக தோன்றினாள்.உடுமலைபேட்டைக்கு செல்லும் முன் இடையில் அங்கங்கு நிறுத்திய இடங்களில் வயதான பெண்கள் ஏறினர். அவர்களும் நாங்கள் காதலர்களோ என்ற எண்ணத்தில் தொந்தரவு செய்யவில்லை.நானும் எந்திரிக்க முயற்சி செய்யாவிட்டாலும் ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி என்னை ஆட்கொண்டு இருந்தது.உடுமலைபேட்டை அடையும் முன் அவ்வப்போது அவள் என்னை பார்ப்பது போல் ஒரு  குறுகுறுப்பு இருந்தது.எனக்கும் 'நீங்க யாரு,என்னா பண்றீங்க' என்று கேக்க வேண்டும் எண்ணம் இருந்தது. குறைந்தபட்சம் நன்றியையாவது தெரிவிக்க வேண்டும் என்ற உந்தல் இருந்து வந்தது.

பஸ் உடுமலைபேட்டையை வந்து சேர்ந்து விட்டது.கடைசி சீட்டில் மட்டும் ஒரு ஆள் எழுவதும் அந்த இடத்திற்கு இரண்டு பேர் சண்டை போடுவதும் தெரிந்தது.வண்டியில் இப்போது ஏறிய ஆட்கள் வந்து அருகில் நிற்கின்றனர். நான் எந்திரித்து வழி விடுவது நலம் என எந்திரிக்க எத்தனித்தேன்.

"செம்மலர் நீங்க ஏன் .. ,நீங்க என் பக்கமா வந்து உக்காருங்க.யாரும் வந்தா அந்த பக்கம் உக்காரட்டும்."


இப்பொழுது அந்தப் பொண்ணை முழுவதுமாக உற்றுப் பார்த்தேன்.இவளை இதற்கு முன் எங்கும் பார்த்து,பேசிய பரிச்சயம் இல்லையே,அப்புறம்  எப்படி இவளுக்கு என் பெயர் தெரிந்தது?


"இல்லமா,நான் இங்க ஒரு பிரண்டைப் பார்க்கணும்,அப்புறம் பார்ப்போம்" என்று சொல்லி விட்டு ஓடும் பஸ்சில் இருந்து குதிக்க வேண்டியதாகப்  போயிற்று. யாராய் இருப்பாள் அவள் ! 

Friday, July 1, 2011

அம்மா

எவருக்கும் தொடக் கூட பிடிக்காத,சீண்டாத  ஒரு சவலைப் பிள்ளையை அமூதூட்டி தோளிலும்,மடியுளும் கிடத்தி என்னை ஆளாக்கிய அன்னை நீ தான். உன்னில் பாதியும்,தந்தையில் பாதியுமாக நான் இருந்த போதும் உன்னையே முழுவதுமாக வரித்துக் கொண்டு நான் இருப்பதாக பிறர் கூறக் கேட்கும்போது அடையும் மகிழ்ச்சியை நான் வேறு எதிலும் பெற்றதில்லை. நான் பிறந்தது முதல் எனக்காக நீ பட்ட துன்பங்களும்,துயரங்களும் இன்னும் என் மனதில் ஆழமான வடுவாகவே நிற்கின்றன.பெற்ற கடனை செய்வதாக மட்டும் அல்லாமல் உணர்வுப்பூர்வமாகவும்,ஆத்மார்த்தமாகவும் செய்தாய்.இங்கு தான் மகனுக்குரிய ஆற்றாமையும் எனக்குள் எழுகிறது. என் பொருட்டு நீ படும் வேதனைகளை என்னால் காண சகியவில்லை.

இந்தக் கடிதத்தை யாராவது வாசிக்க நீ கேட்கையில் என்னுடைய உடல் எங்கு போனது என அறியாமல் என் உயிர் பிரிந்து இருக்கும். நீயும் அதைக் கண்டு துன்புற வேண்டாம் என்றே நானும் விரும்புகிறேன். நினைவு இருந்த நாள் முதல் நினைவு இல்லாது போன இந்நாளிலும்  நீயே என்  அம்மா. நினைவுகளைத் திரட்டி எழுத முயலும்போது கைபேசி ஒலிக்கிறது. 

"ஏங்க
,இன்னும் ஆபிசில் உக்காந்து என்னா பண்ணிக்கிட்டு இருக்கீங்க? இங்க உங்க மக பண்ற அடம் தாங்க முடியல. உங்க அம்மாவை பார்க்கணும்னு ஒரே பிடிவாதம்.நம்ம என்னா சென்னையிலா இருக்கோம்,உடனே போறதுக்குன்னு சொன்னாலும் கேக்க மாட்டேங்கிறா?""பதில் கூற முடியாமல் கண்ணீர் முட்டுகிறது.இதுவரை வெள்ளைத் தாளில் எழுதியதை கிழித்து எறிகிறேன்.

நீ எங்கும்,என்றும்,எக்கணத்திலும் என்னோடு இருக்கிறாய் அம்மா ! ! !



Friday, June 24, 2011

தீராத கணங்கள்

கால்களுக்கு இடையில் ஏதோ ஒன்று ஊர்வதை தட்டி விடுவதற்காக போர்வையை உதறி விட்டு படுக்கையில் இருந்து எழுந்தான். எலியா,பூச்சியா என்று பகுத்தறிய முடியாத  வஸ்து ஒன்று ஓடியது. அதை கொல்லவோ, அடிக்கவோ மனசில்லை. இதுவரை  நாம் வாழ்வதற்காக எத்தனை உயிர்களை மிதித்துக் கொன்று, ம்ம். என்ன காலையிலே இப்படி ஒரு சிந்தனை. மணி எத்தனை என்று பார்ப்பதற்காக செல்லை எடுத்து பார்த்தால் செல் அணைந்து விட்டு இருந்தது.அதை எடுத்து பிளக்கில் சொருகி விட்டு கதவை திறந்து பார்த்தால் வெளியில் மழை பெய்வதுமாக நேரம் கணிக்க முடியாததாய் இருந்தது.பத்துக்கு நாலு அடி கணக்கில் ஒரு எலிப் பொந்து.இதற்குள் இரண்டு கட்டில்கள் வேறு. கழிப்பதற்கும்,குளிப்பதற்கும் ஒன்று தனியாக ஒடுக்கி விடப்பட்டு இருந்தது. எப்போதும் அவசியப்படாத ஏ.சி. ஓடிக் கொண்டே இருக்கிறது.விட்டு போன தூக்கத்தின் மிச்சம் கவலையை கொடுத்து கொண்டு இருந்தது. உறக்கத்துக்கும்,விழிப்புக்கும் பேதமற்றதாய் இதுபோன்ற கணங்கள் தொடருவதைப் பற்றிய ஏக்கத்தோடு எப்படி,எப்பொழுது வெளியே செல்வது? என்ற கேள்வி மனத்திலே தங்கி இருந்தது. 


குளியலறைக்குள் உள்ளே நுழைந்து கதவை தாழிட்ட இரண்டு நிமிடங்களில் யாரோ கதவை தட்டுவதை போன்ற சத்தம் கேட்டது.பதில் கொடுக்கும் முன்னே ஒரு பெண் உள்ளே நுழைவதை கதவில்  உள்ள  சிறிய  சந்தின்  வழியாக காண முடிந்தது.தான் தற்போது இருக்கும் நிலையில் வெளியே உடனே வர முடியாது.அவளாக போன பின்னால் வெளியே வருவது நல்லது. இவள் அறையை சுத்தம் செய்ய வந்து இருக்கிறாள் என்றால் மற்ற அனைவரும் வேலைக்கு போயி விட்டார்கள்.இந்நேரம் நம்மை எல்லோரும் தேடிக் கொண்டு இருப்பார்களே ! என்ற கவலை சூழ்ந்து கொண்டது. யாருக்கு மூக்கு வேர்த்ததோ செல் ஒலிக்கும் சத்தம் கேட்கிறது. அலுவலகமாகத் தான் இருக்கும்.வேறு  மார்க்கம் இல்லை,துண்டோடு வெளியே வர வேண்டியது தான்.

சிறிது நேரம் கழித்து அவன் அலறும் சத்தம் மட்டுமே கேட்டது:) 

Monday, June 13, 2011

கம்யூனிசம் தமிழகத்தில் வாழ்கிறதா? வீழ்கிறதா?

அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல்களின் முடிவில் இடதுசாரிகள் மேற்கு வங்கத்திலும்,கேரளாவிலும் ஆட்சியை இழக்க நேரிட்டது. இங்கு தமிழகத்தில் இடதுசாரிகள் பங்கு வகித்த அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றதால் இங்கு நிறைய இடங்களை கைப்பற்ற முடிந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டு மே.வ.,கேரளாவில் பலம் குறைந்தது போலவும்,தமிழகத்தில் பலம் குறையாமல் இருப்பது போலவும் ஒரு மாயத்தோற்றம் நிலவுகிறது.என்னுடைய பார்வையில், கேரளாவில்  அச்சுதானந்தனின் தனிப்பட்ட செல்வாக்கினால் கிடைத்த இடங்களைப்  பார்க்கில் ஒரு வகையில் இடதுசாரிகளுக்கு வெற்றியே. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் கட்சியின் எழுச்சி,மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் திரிணாமுல் இருப்பது,நந்திகிராம்,சிங்கூர் பிரச்சனைகளில் புத்ததேவின் அலட்சியம்,தொடர்ச்சியாக 35 ஆண்டுகள் பதவியில் இருந்ததால் ஏற்பட்ட சலிப்பும் தோல்விக்கு காரணங்களாக விளங்குகிறது. இந்த நிலை இப்படியே தொடரும் என எதிர்பார்க்க முடியாது.ஏனென்றால் இந்த தோல்விகளில் ஒரு செய்தி இருக்கிறது. கட்சியை விட அச்சுதானந்தன் பலமானவராக மாறி இருக்கிறார். ஜோதிபாசுவின் இடத்தை புத்ததேவால் நிரப்ப முடியவில்லை. ஆகையால் இந்த  இரண்டு மாநிலங்களிலும் மீண்டும் ஆட்சி பொறுப்புக்கு வர இ.எம்.எஸ்.,ஜோதிபாசு,அச்சுதானந்தன் மாதிரியான  ஆளுமைகளும் கட்சியின் அமைப்பினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்  மட்டுமே சாத்தியமாகும் என கருதுகிறேன்.

இந்த இரண்டு மாநிலங்களை விட தமிழகத்தில் இடதுசாரிகளின் நிலைமை பிற தேசிய வலதுசாரி பா.ஜ.க,,காங்கிரஸ் கட்சிகளின் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்படும் நிலைக்கு வந்துவிட்டதாக நான் கணிக்கிறேன்.இந்த தேர்தலின் வெற்றியில் மற்றவர்களை விட விஜயகாந்தின் பங்களிப்பும்,கருணாநிதி எதிர்ப்புமே அ.தி.மு.க. வுக்கு வெற்றியைத் தேடித் தந்து உள்ளது. இதுவே இடதுசாரிகளின் வீழ்ச்சியின் தொடக்கமாக இருக்கலாம். தொண்டர்களே இல்லாமல் ராகுல் காந்தியின் இளம்படை  நடைப்பயணம் மேற்கொள்கிறது,தேர்தலில் நின்று மரண  அடி வாங்குகிறது. தமிழகத்தின் நிலைமை சரிவரத் தெரியாமல் ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கும் ராகுல் காந்திக்கு இருக்கும் ஆர்வம் கூட இடதுசாரிகளுக்கு தமிழகத்தின் மேல் இருக்கிறதா என்ற சந்தேகம் எனக்கு வருகிறது. தேசியத்தையும்,திராவிடத்தையும் ஒன்றாக முரண்பாடாக கட்சிப் பெயரில் வைத்து இருந்தாலும் கட்சி தொடங்கி ஆறு ஆண்டுகளில் மாநிலக் கட்சிக்கு உரிய வளர்ச்சியை விஜயகாந்த் பெற்று வருவது தி.மு.க. வினருக்கு  மட்டுமல்ல பா.ஜ.க,,காங்கிரஸ்,இடதுசாரிகள்,ம.தி.மு.க. மற்றும் சாதிக் கட்சிகள் உட்பட அனைவருக்கும் எதிர்காலம் பற்றிய கேள்விக்குறியை எழுப்பி உள்ளது. கருணாநிதி  தன்  குடும்பத்தை மட்டும் பேணி காப்பதில் முனைப்பாக இருப்பதால் கட்சியின் எதிர்காலம் ஸ்டாலினின் அடுத்தகட்ட  செயல்பாடுகளிலே இருக்கிறது. தி.மு.க.,அ.தி.மு.க வுக்கு மாற்றாக கட்சி தொடங்கிய வை.கோ. அங்கும்,இங்கும் மாறி மாறி இன்று திக்குதிசை தெரியாத காட்டில் நிற்கிறார்.

இந்த சூழலில் நீங்கள் எங்கே நிற்கிறீர்கள் தோழர்களே? ஜெயலலிதா உங்களுக்கு விருப்பமில்லாத தொகுதிகளை கொடுத்தவுடன் விஜயகாந்துடன் ஓடிப்போயி பேசுகிறீர்கள். கருணாநிதிக்கும்,ஜெயலலிதாவுக்கும் இடையில் ஓடிக் கொண்டு இருந்த நீங்கள் இனிமேல் ஓடி தஞ்சம் அடைய இன்னொருவர் இருக்கிறார் அவ்வளவே. ஒருநாள் விஜய் பின்னாடி கூட நீங்கள் ஓடக்கூடும்.மாநிலங்களுக்கு  இடையேயான பிரச்சனைகளில் தேசியக் கட்சியாக செயல்படும் நீங்கள் காங்கிரஸ்,பா,.ஜ.க., வை விட குழப்பமான முடிவுகளையே எடுக்கிறீர்கள். காவேரி நதி நீர் விவகாரத்தில்  நீங்கள் காட்டும்  ஆர்வம் துளி கூட முல்லைப் பெரியாறு, சேலம் ரயில்வே கோட்ட  விவகாரத்தில்  காட்டவே இல்லை. உலகின் எந்த மூலையில் ஒரு சிறுபான்மை இனம் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்காக குரல் கொடுக்கும் தாங்கள் கூர்க்கா லேண்ட், தமிழ் ஈழ விவகாரங்களில் முதலாளித்துவ நாடுகள் போல நடப்பது ஏன்? இராக்,லிபியா,ஆப்கானிஸ்தான் என்று அமெரிக்காவால் தாக்கப்படும் நாடுகளுக்கு வழியும் உங்கள் கண்ணீர் திபத்,அருணாச்சல் விசயங்களில் சீனாவை எதிர்த்து குரல் கொடுக்காது ஏன்? ரஷ்யாவின் ஆதிக்கத்தால் அருகில் உள்ள நாடுகள் பாதிக்கப்படும்போது நீங்கள் எந்த எதிர்வினையும் கொடுப்பதில்லையே ஏன்?தீக்கதிர் பத்திரிக்கையில் கேரளா அரசின் விளம்பரங்கள்,செயல்பாடுகள் எல்லாம் வருகிறதே,கேரளத்தில் தமிழகத்தின் நிகழ்வுகளை தெரிவிக்கும் விதமாக ஏதேனும் செய்கிறீர்களா?அச்சுதானந்தன் போன்றவர்களுக்கு ஆதரவு அளிக்காமல் பினராயி விஜயன்,கொடியேறி பாலகிருஷ்ணன் போன்றவர்களுக்காக பிரகாஷ் காரத் வக்காலத்து வாங்குகிறார்? அப்போது அது சர்வாதிகார தலைமைப் பண்பு இல்லையா?

இன்றும் பணம்,பதவி போன்ற சுகங்களுக்கு அலையாமல் கட்சிக்காக,கொள்கைக்காக வாழும்,பாடுபடும்  தோழர்கள் இடதுசாரிகளில் மட்டுமே காண முடிகிறது. உள்ளூர் பிரச்சனைகள் முதல் சர்வதேச பிரச்சனைகள் வரை  குரல் கொடுக்கும் முதல் ஆளாக கம்யூனிஸ்ட்கள்  இருக்கிறார்கள். தொழிலாளர்கள்,ஒடுக்கப்பட்ட,பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராடுவதில் முதன்மையாக  இருக்கிறார்கள். தஞ்சையில் நிலவுடமை கொடுமைகளுக்கு எதிராக போராடியதும், இன்றளவும் தொழிலாள வர்க்கத்துக்கு போராடுவதிலும்,சாதிய முரண்பாடுகளை களைவதிலும் முன் நிற்கிறது. உள்ளூர் பண்பாடு,கலாச்சாரம்,கலை,இலக்கியம் இவற்றை வளர்ப்பதில் உண்மையான அக்கறை கொண்டு உள்ளது.


அதே நேரத்தில் விருதுக்காக அனுப்பப்படும் திரைப்படங்கள்,தீவிர இலக்கியவாதிகளின் படைப்புகள் எப்படி பெரும்பான்மையினரை  சென்று அடைவது இல்லையோ அதே நிலைமை இடதுசாரி கட்சிகளுக்கும் இங்கு நேர்கிறது. எப்போதும் ஒதுக்கப்படும்,புறக்கணிக்கப்படும் மக்களுக்காக மட்டும் போராடிக் கொண்டு இருந்தால் பெரும்பான்மை சமூகம் அப்படியே தான் இருக்கும். நீங்கள் போராட ஒரு கூட்டம் வேண்டும்,அந்த வாக்கு வங்கி உங்களுக்கு வேண்டும்.

இடதுசாரிகள் பக்கம் இருந்தால் பணம் இல்லாமல் தங்கள் தேவையை தீர்த்து வைப்பார்கள் என்ற அளவில் மட்டுமே தொழிற் சங்கங்களில்  இருக்கும் அரசுப் பணியாளர்கள் (போக்குவரத்து,மின்துறை உட்பட) எண்ணம் இருப்பதை நான் கண்டு இருக்கிறேன்.மேலும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்,கடை அடைப்பு போன்ற நிகழ்வுகளைப்  பார்க்கும் சரிபாதி மக்கள் 'கம்யூனிஸ்ட்கள் இப்படித் தான்" என்று  புலம்புவதைப் பார்க்க முடிகிறது. முடிவில் மத,சாதி ரீதியான கட்சிகளுக்கு எப்படி சரிபாதி எதிர்ப்பு இருக்கிறதோ அப்படியே உங்களுக்கும் வந்து விடுகிறது.
சமூகத்தில் ஏற்ற தாழ்வுகளை நீக்கவே போராட வேண்டும்.அதே அடுக்கில் நிறுத்தி வைக்க அல்ல.அனைத்து தரப்பட்ட மக்களுக்குமான கட்சி என்ற நம்பகத்தன்மையை கொண்டு வருவதிலே வெற்றியின் சூட்சமம் இருக்கிறது. சமூகநீதி,சமத்துவம் பேசிக் கொண்டே இருந்தால் மட்டும் வந்து விடாது.

இந்த நாட்டை ஊழலில் இருந்து காப்பாற்ற அன்னா கசாரேக்களும்,ராம் தேவ்களும் உருவாகி கொண்டு இருக்கிறார்கள். அவர்களின்  பின்னால் செல்லும் மக்களை காணும் போது வலதுசாரிகள் மட்டுமல்ல,இடதுசாரிகளும் இந்த நாட்டை வழி நடத்த லாயக்கில்லை என்ற முடிவுக்கு மக்கள் வந்து விட்டதாக கருத வேண்டி இருக்கிறது.

நரேந்திர மோடியை வைத்து பா.ஜ.க. பிரச்சாரம் செய்யும் போது நீங்கள் ஏன்  உங்களிடம் உள்ள நல்ல  ஆளுமைகளை முன்னிறுத்தக் கூடாது? ரஷ்யாவில் கூட புடின் என்னும் சர்வாதிகார வல்லமை கொண்டவரே ஆட்சி செய்கிறார்,கம்யூனிச  கொள்கை மட்டும் கொண்டு அல்ல.இது ஒரு வகையில் பிடரேல் காஸ்ட்ரோவுக்கு கூட பொருந்தும் என நான் நினைக்கிறேன். கொள்கைகளுக்கு  மட்டும் முன்னுரிமை கொடுக்காமல்  ஜோதிபாசு,அச்சுதானந்தன் மாதிரியான  தனிநபர்களையும்  நிறுத்தலாமே? பிறரை இது மாதிரி ஆட்சி செய்யுங்கள் என்று வலியுறுத்தும் நீங்கள் ஏன் ஆட்சிப் பொறுப்புக்கு வர முயலக்கூடாது ? திராவிடக்  கட்சிகள், காங்கிரசை  கீழே தள்ளி எந்திரிக்க விடாமல் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தது போல் நீங்களும் வரலாமல்லவா? 

கால மாற்றத்திற்கு ஏற்றவாறு சிறிதும் சமரசமின்றி,சுய பரிசோதனை இன்றி நாங்கள் இப்படியே தான் தமிழகத்தில்  அரசியல் செய்வோம் என்றால் பன்னும்,டீயும் சாப்பிட்டு விட்டு உண்டியலைக் குலுக்கிக்  கொண்டே இருங்கள்,தோழர்களே !

 "கம்யூனிசம் பிடிக்கும்,கம்யூனிஸ்ட்களைப் பிடிக்காது" என்று பொதுவாக சொல்லப்படுவது போல் எனக்குச்  சொல்லத் தெரியவில்லை.செம்மலர் செல்வன் என்ற என்னுடைய இயற்பெயரை ஒரு கம்யூனிசத் தோழர் ஒருவரே எனக்கு சூட்டினார். எவ்வித சார்புமின்றி மற்ற திராவிடக்  கட்சிகள் மீதோ,தேசிய கட்சிகள் வைக்க முடியாத சூழலில் சராசரியான,மேம்போக்கான,ஆய்வுகளற்ற,ஆழமற்ற ஒரு அரசியல் பார்வையில் இந்த கருத்துகளை முன் வைக்கிறேன்.

Saturday, June 11, 2011

நாஞ்சில் என்னுமொரு நாடு

தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்திய நாட்டுக்கே தென்மூலையில் எல்லையாக  அமைந்து இருக்கும் கன்னியாகுமரியை கொண்டுள்ள நாஞ்சில் நாட்டிற்கு நிறைய சிறப்புகள் உண்டு. முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி ,திருவள்ளுவர் சிலை,சுசீந்திரம்,திற்பரப்பு அருவி,பேச்சிப்பாறை அணை,பத்மநாபபுரம் அரண்மனை,முட்டம் முதலான பல இடங்கள் ஒருங்கே அமையப் பெற்ற ஒரு நாடு. கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை,தோழர் ஜீவா,கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்,எழுத்தாளர்கள் சுந்தர ராமசாமி,நாஞ்சில் நாடன்,ஜெயமோகன்,தோப்பில் முகமது மீரான்,அரசியல்வாதிகள் நாஞ்சில் மனோகரன்,நாஞ்சில் சம்பத் என்று கலை,இலக்கியம்,அரசியல் என்று அனைத்திலும்  முத்திரை  பதித்த,பதிப்பவர்கள் வாழ்ந்த மண் இது. மக்களின் தொடர்ச்சியான உணர்ச்சிகரமான போராட்டங்களின் விளைவாகவே குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது என்பது வரலாறு.


மலையாளத்தை  தாய்மொழியாக கொண்ட மக்கள் அதிகமாக வாழும் குமரி  மாவட்டம், "நெல்லை எனக்கு எல்லை,குமரி எனக்கு தொல்லை" என்று கருணாநிதி கூறியது போல  நமது ஆட்சியாளர்களால் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்படுகிறது. இங்குள்ள கிறிஸ்தவர்களுக்கும்,இந்துக்களுக்கும் உறவு அவ்வளவு சுமூகமாக  இல்லாதது தேர்தலில் கூட பிரதிபலிக்கிறது.ஒட்டுமொத்த தமிழகமும் பா.ஜ .க.வை புறக்கணிக்கும் சமயத்திலும் இங்கு அவர்கள் பெருவாரியான வாக்குகள் பெறுகின்றனர்.திராவிடக் கட்சிகளை விட காங்கிரசும்,செங்கொடித் தோழர்களும் இங்கு ஆதிக்கம் செலுத்துகின்றனர். இது உள்ளூர் சார்ந்த அரசியல் (அ) கேரளா சார்ந்த அரசியல் (அ) தேசிய அரசியல்  சார்ந்த நிலைப்பாடு மட்டுமே இங்கு  பிரதிபலிப்பதாக அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.


வெளிநாடுகளிலும்,வெளியூர்களிலும் புலம் பெயர்ந்து  வாழ்பவர்கள் அதிகம். வரதட்சணை அள்ளிக் கொடுக்கப்படும் பகுதியாகவும் விளங்குகிறது. என்னுடைய நண்பர் ஒருவர் கடந்த பத்து ஆண்டுகளாக தன் உடன் பிறந்தவர்கள் திருமணத்திற்காக  வெளிநாட்டில் பணி புரிந்து கொண்டு இருக்கிறார்.


இவர்கள் பேசும் வட்டார பேச்சு மொழி வழக்கு மலையாளம் போல  தோன்றுகிறது.இதன் பொருட்டு நம்மில் பலர் அவர்களை மலையாளிகள் என்றும் கூட முத்திரை குத்துகின்றனர்.ஆனால் யதார்த்தத்தில் மலையாளிகளை விடவும் பிற மொழி கலப்பின்றி இவர்கள் தான் தமிழும்,மலையாளம் கலந்த  அச்சு அசலான மொழி பேசுகின்றனர்.அதனாலே பலருக்கு புரிவதில்லை என்று நான் கருதுகிறேன்.அவர்களின் பேச்சில் அந்த வட்டாரத்துக்கு உரித்தான மொழி,பண்பாடு,கலாச்சாரம்,சமூகம்,இயல்பு,உள்ளார்ந்த உணர்வு ஆகிய குறியீடுகளைப் பார்க்க முடிவதால் அந்தப் பேச்சு என்னை மிகவும் கவர்கிறது.
 


இவ்வளவு சிறப்பம்சங்கள் இருந்தும் இங்கு எனக்கு பிடிக்காதவை ,விளங்காதவை சில இருக்கின்றது. நாகர்கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் கூடும் பொது இடங்களிலோ, கடைக்கோ,உணவகத்துக்கோ சென்றால் வெளியூர் மனிதனைப்  பொருட்படுத்தாத,மதிக்கப்படாத நிலையை காண முடிகிறது.மற்ற ஊர்களில் போலியாகவாது முகமன் செய்து வரவேற்பார்கள்.இங்கு அதற்கு வாய்ப்பே இல்லை.நல்ல கல்வியறிவு,பொருளாதார வசதி,யாருக்கும் தலை வணங்காத குணம் இவ்வூர் மக்களிடம் அதிகம் உண்டு.அதனால் எவரையும் சட்டை செய்வதில்லையோ என்னவோ?  இதற்கான காரண  காரியங்கள்  வேறு ரூபத்திலும் இருக்கலாம். சில இடங்களில் அவர்களைப் பற்றி பொதுவாக ஏற்படும் குழப்பம் (தமிழனா,மலையாளியா என்ற) அந்த ஊரில் நடமாடும்போது நமக்கே "நாம் யார்?" என்ற கேள்வி எழும்பி நம்மை இயல்பில் இல்லாமல் இருக்கச் செய்து விடுகிறது. சில வேளைகளில்  திருவனந்தபுரம்,கொச்சின் போன்ற ஊர்களே பரவாயில்லை என்ற எண்ணம் தலைதூக்குவதை தடுக்க இயலவில்லை.பொதுவாக  சென்னை மக்களைத் தான்  பிறர்க்கு  மரியாதை தராத கொச்சை பேச்சு என்ற வகையில் தென்  மாவட்ட மக்களும்,மேற்கு மாவட்ட மக்களும் கூறுவர்.நான் பார்த்த வரையில் சென்னை மக்கள் இயல்பானவர்கள்,அவர்கள் கையாளும் மொழி மட்டுமே பிறர் அவர்களைப் பற்றி அவ்வாறு  நினைக்கத் தூண்டுகிறது என்று கருதுகிறேன்.


ஆரல்வாய்மொழி,குழித்துறை முதலான  சிறப்பான தமிழ்ச் சொற்களை  ஊர்ப் பெயர்களாக தாங்கியுள்ள  நாட்டில் பெயர்ப் பலகைகள்,சுவர் வாசகங்களில் ஆங்காங்கே "ர"கத்திற்கு பதிலாக "ற"கரம் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.அநேகமாக அவர்கள் உச்சரிப்பு போலவே எழுத்திலும் குறிப்பிடுகிறார்கள் என்று நம்புகிறேன். தமிழ்நாட்டில் உச்சரிப்பு குறைபாடுகள் நிறைய உண்டு.ஆனால் எழுத்தில் எழுதும்போது சரியாகவே பயன்படுத்துகின்றனர். (தெரிந்தே பிழையாக எழுதுபவர்கள் வேறு வகை).


நாஞ்சில் மக்கள் மீதான விமர்சனங்கள் அல்ல இவை,ஆதங்கம் மட்டுமே. இவை எனது நேரடி அனுபவம் மற்றும் நான் அறிந்த சில நண்பர்களின் கருத்து சார்ந்த பார்வை மட்டுமே. அந்நிலம் சார்ந்தவர்களின் பார்வை அறிந்து கொள்ளப்படும்போது,வாதம் எடுத்து வைக்கப்படும்போது என்னுடைய கருத்தையும் மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது,இல்லையென்றால் எப்போதும் எனக்கு அது ஒரு மனக்குறையாகவே நீடித்துக் கொண்டு இருக்கும்.

Friday, June 10, 2011

தானாய் வீழும் மரம்

நேற்று இந்த வழியில் வண்டியில் சென்றுகொண்டு இருக்கும்போது  நாங்கள் பார்க்க  இந்த மரம் தானாக கீழே வீழ்ந்தது.வழியில் கிடந்த மரத்தை அப்புறப்படுத்த கோடாலி கொடுத்து உதவினான் ஒரு நண்பன்.அப்பொழுது "இந்த சத்து பிடிப்பற்ற மரங்களுக்கு கீழே தலைக்கவசம் இல்லாமல் ஒய்வு எடுப்பது கூட ஆபத்தானது" என்று பேசிக்கொண்டு இருந்தோம். தானாய் வீழும் மரமும் கூட மனிதனால் வெட்டப்படாமல் போகாது போல  என்ற எண்ணமும் மனதினில் ஓடிக்கொண்டு இருந்தது.

இன்று காட்டுக்குள் சென்ற அந்த நண்பன் வழிப்பாதைக்காக ஒரு மரத்தை வெட்ட முனைகையில் மற்றொரு மரத்தின் கிளை  முறிந்து தலையில் விழுந்து இறந்து போனான்,தலையைப் பார்க்காமல் வேலையை மட்டும் குறியாக பார்ப்பது தவறு என்ற படிப்பினையும் கொடுத்துக் கொண்டே.

நேற்று கைகொடுத்த கை இன்று இல்லை. 'விதி வலியதோ' என்ற எண்ணம் மேலோங்குகிறது. வாழ்வின் மீதான நம்பிக்கையும்,அவநம்பிக்கையும் ஒரே சேர மனதில் எழும்பி கண்ணீர் மல்கச் செய்கிறது. 

Monday, June 6, 2011

இடைநிலையில் இருக்கும் ஒரு சாதி

இடைநிலை ஆதிக்க சாதியில் பிறப்பவனுக்கு ஒரு வசதி இருக்கிறது.தன்னை மட்டும் ஆராய்ந்து பார்க்காமல் பார்ப்பனீயத்தை அவர்களின்  கூடவே நின்று கொண்டு பொதுவில்  சாடலாம்,தலித் அரசியலை தூர  நின்று கொண்டு வெறுக்கலாம். ஒரு வகையில் சராசரி இந்தியனும் கூட இப்படித் தான் இருக்கிறான் தம்மைப் பற்றி உயர்வாக நினைத்துக் கொண்டு வெள்ளைக்காரனைக் கண்டு பொருமுவதும்,கறுப்பனைப் பார்த்து விலகிப் போவதுமாக!

மேற்குறிப்பிட்ட  தட்டையான  ஒரு கோணத்தில் மட்டும் நோக்கினால்  நடுநிலைவாதிகளையும் கூட  இதே நேர்கோட்டில் நிறுத்த முடியும்.ஏனென்றால் நடுநிலையில் இருப்பதாக காட்டிக்கொள்பவனுக்கு ஆட்சியாளர்கள்,அரசியல்வாதிகள்,நடிகர்கள் என எவரையும்  விமர்சிக்கும் வசதி தானாகவே வந்து சேர்ந்து விடுகிறது.இது எப்பொழுதும் அடுத்தவனை குறை சொல்லிவிட்டு தமது அறிவிஜீவித்தனத்தை காண்பித்து கொள்வதாகவும் பொதுவில் தென்படும்.சில நேரங்களில் தாம் யார்,எதற்காக பேசுகிறோம் என்பதை கூட சிலர் மறந்து பேசுவது உண்டு. ஆனால் அது மட்டுமே முழுக்க  உண்மையாக இருக்க முடியாது. உதாரணத்துக்கு  நீங்கள்  ஏதாவது ஒரு தரப்பு நியாயங்களை மட்டும் பேச தொடங்கி விட்டால் அதற்குரியவர்கள் தவறே செய்தாலும் நியாயப்படுத்தி  அதுவே சரி என்று வாதிடவும் செய்வீர்கள். இந்தச் சூழலில் 'தாமரை இலையின் மேலே இருக்கும் நீர்' போல் பட்டும் படாமல் இருப்பதை விட மாற்றுக்கருத்து வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.அதே நேரத்தில் மாற்றுக் கருத்தானது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி,தான் வாதத்தில் வெல்ல வேண்டும்,நடுநிலையாக இருக்கிறேன் பேர்வழி என்பதை விட்டொழித்து விட்டு குறைந்தபட்ச சமூக அக்கறையோடு பொறுப்பான,நேர்மையான,விசாலாமான பார்வையாக இருத்தல் வேண்டும்.

தமிழர்களாகிய  நாம் பொதுவில் எந்த விசயத்துக்கும் உணர்ச்சிவசப்பட்டு ஒரு சாரார் பக்கம்  சேர்ந்து கொண்டு பேசுவதும்,அதை புறக்கணிப்பவர்கள்,மாற்றுக்கருத்துக்கள் கொண்டவர்கள்  மேல் எதிரிகள்,துரோகிகள் என்று பட்டம் சூட்டுவதும்  நடந்து கொண்டு இருக்கிறது.இது ஏறக்குறைய அமெரிக்கக்காரன் சொல்வது போல் "ஒன்று என்னுடன் சேர்,இல்லையெனில் நீயும் எதிரியை  ஆதரிப்பவன் என்கிற கணக்கில் நீயும் எதிரியே" என்ற அர்த்தத்திலே எடுத்துக்கொள்ள வேண்டியதாகிறது. .

இன்று தவறாக தெரியும் ஒன்று நாளை சரியாகவும் ஏற்கப்படும். எதுவும் நிரந்தரமற்ற மாறும்,மாறிக்கொண்டே இருக்கும் நிலையற்ற இந்த  உலகில் மாற்றுக் கருத்துக்களை ,நடுநிலைமை கருத்துகளை நாம் ஏன் எப்போதும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டும்? 

மாற்றுக்கருத்தை ஏற்று  முகம் கொடுத்து பேச வேண்டாம்,முகத்தை திருப்பிக் கொண்டு கூட போங்கள்,ஆனால் முகத்தில் எச்சிலை மட்டும் காறி உமிழாதீர்கள்.



Friday, June 3, 2011

சீமான் - விஜயலட்சுமி > பெண்கள் ஏன் ஆண்களைப் பிடித்து தொங்குகிறார்கள்?


சீமான்-விஜயலட்சுமி விவகாரத்தில் என்ன நடக்கிறது இது சதியா, இல்லை உண்மையா ? என்று விவாதிப்பதே தேவையற்றது என நான் கருதுகிறேன். முதலில் இது அவர்கள் இருவரின் தனிப்பட்ட உறவு நிலை வாழ்க்கை சம்பந்தப்பட்டது.

பொதுவில் ஆணும்,பெண்ணும் ஒருவரை ஒருவர் மனப்பூர்வமாக விரும்பித் தான் காதலிக்கின்றனர். பின்பு ஏதோ சில காரணங்களால் ஒரு சந்தர்ப்பத்தில் இருவரும் பிரிகின்றனர்,இல்லை யாரோ ஒருவர் விலகத் தொடங்குகிறார் என்று வைத்துக் கொள்ளுவோம்.இதற்காக என்னை நம்பிக்கை மோசம் செய்து விட்டார்கள் என ஆண் மீது பெண்ணோ,பெண் மீது ஆணோ வழக்கு போடுவது சரியான நிலைப்பாடா? காதலிக்கத் தொடங்கும்போது மட்டும் வக்கீல் வைத்துக் கொண்டா காதலிக்கிறீர்கள்? தன் மீதான பாலியல் குற்றச்சாட்டு இருந்தால் அதைப் பற்றி வழக்கு தொடுப்பது நியாயம். அதுவும் கூட இன்றைய காலகட்டத்தில் (காதலிக்கும்போது ஏற்படும்) யாரால்,யார் தூண்டப்பட்டது என்று கூட சொல்ல முடியாது. இதில் போய் காதலித்து ஏமாற்றி விட்டான் என்று வழக்கு தொடர ஆரம்பித்தால் நாட்டில் இனியும் எத்தனை பேர் காவல்துறை,நீதிமன்றத்துக்கு செல்வது?

ஆண்கள் இதுமாதிரியான சந்தர்ப்பங்களில் காவல்துறையை நாடுவதில்லை. ஒருக்கால் அவன் அங்கு சென்றாலும் அவனுக்கு இழுக்கும்,அவமானமும் கூடும் என்று அஞ்சி செல்லாமல் இருக்க கூடும். பெண்களுக்கும் இப்படி குற்றச்சாட்டுகளுக்காக காவல் துறை,நீதி மன்றங்ககளை நாடிச் செல்வது அவர்களின் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்க கூடியது. ஜீவனாம்சத்தை எதிர்பார்த்து நிற்கும் நிலைமையில் பெண்கள் இன்று இல்லை என்று சொல்லலாம். அப்படி இருக்க .வாழ்க்கை முழுவதும் ஒரு துணை,பாதுகாப்பு வேண்டும் என்று நினைத்து வழக்கு போட்டு இவ்வாறு நம்பிக்கைத் துரோகம் செய்யும் ஆண்களை இழுத்து வந்து கல்யாணம் கட்டிக்கொண்டு எப்படி காலத்தை கடத்துவார்கள்? ஏன்,எதற்காக இந்த பெண்கள் இப்படிப்பட்ட ஆண்களைப் பிடித்து தொங்குகிறார்கள்?

Wednesday, June 1, 2011

இனி இரவுகளை தொலைப்பதில் அர்த்தமில்லை:)


நான் அவனை காதலிக்கிறேன். எப்போது இருந்து காதலிக்கிறாய் என்று என்னிடம் நீங்கள் கேட்பது குழந்தையிடம் நீ எப்போது பிறந்தாய் என்பதற்கு ஒப்பானது.அவனிடம் என்ன பிடித்தது என்று கூட எனக்கு சொல்லத் தெரியவில்லை.நினைவுள்ள நாள் முதலே அவன் மட்டுமே என் கண்ணுக்கு தெரிகிறான். அவன் படிக்கும் கல்லூரியில் சேர்வதற்காக இன்ஜிரியரிங் சீட் கிடைத்தும் பி.எஸ்.சி. மேக்ஸ் சேர்ந்தேன்.ஒரே ஊராக இருந்தும்,கல்லூரியில் அவன் ஜூனியராக படித்தும் என்னுடைய காதலை மட்டும் இதுவரை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.

எனக்கு தீவிரமாக மாப்பிள்ளை பார்த்து வருகிறார்கள். அவனைப் பார்த்து 6 மாத காலம் ஆகி விட்டது. அவன் தற்போது சென்னையில் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறான். நாளை நடக்கவிருக்கும் பட்டமளிப்பு விழாவுக்கு வருபவனிடம் கட்டாயம் சொல்லியாக வேண்டும்.


விழா நிகழ்ச்சியின் இடையே அப்பாவிடம் வந்த போனை பேசுவதற்காக வாசற்படியை தாண்டி வெளியே வருகையில் ,"மாப்ள, ராஜியைப் பார்த்தியா.எப்படி திமிறிக்கிட்டு நிக்குது. நம்ம சாதியில இருக்கிறவளுக எல்லாம் இல்லாததை இழுத்து தூக்கி வச்சுக்கிட்டு அலையுறாளுக .நீ ஆயிரம் தான் சொல்லு,அவளுகளை மாதிரி நேச்சுரலாக யாருக்கும் இருக்காது." என்று ஒருவன் போதையில் அவனிடம் உளறிக் கொண்டு இருக்கிறான்.அதைக் கேட்டுக்கொண்டு இருக்கும் அவனிடம் ஒரு எதிர்ப்போ, ஆமோதிப்போ இல்லை.எனக்கு அங்கே அப்படியே என்னை அறுத்துக் கொண்டு சாக வேண்டும் போல இருந்தது.


இரவாகி விட்டது,எல்லாம் பசிக்கிறது. "இனி இரவுகளை அவனுக்காக தொலைப்பதில் அர்த்தமில்லை".

Monday, May 30, 2011

நீங்கள் எவ்வாறு அறியப்படுகிறீர்கள்?

எனது பால்ய காலம் முதலான தோழர் ஒருவர், "இவன் பெயர் செம்மலர். இவனைப் பற்றி என்ன சொல்வது? ம்... இவன் ஒரு சிந்தனையாளன்" என்று அவரது நண்பரிடம் அறிமுகப்படுத்தினார். எதிர் இருந்தவரும் சிறிதும் தயக்கமின்றி வெகு இயல்பாக சிரித்துக் கொண்டே தொடங்கிய உரையாடல் பல தளங்களில் விரிந்து கொண்டே சென்றது. தோழர் சொன்ன 'சிந்தனையாளன் ' என்ற அடையாளத்துக்கு அறவே நான் தகுதி இல்லாதவனாக இருந்த போதிலும் அவர் அறிமுகப்படுத்திய விதம் என்னை மகிழ்விக்கவே செய்தது.

ஏனென்றால் தொழில், பணம், அந்தஸ்து சார்ந்து (இவர் ஆசிரியர், பொறியாளர், மருத்துவர்,மென்பொருள் வல்லுநர், முதலாளி, வெளிநாட்டில் வேலை பார்ப்பவன்) என்று அறிமுகப்படுத்தப்படும் போது 'இவன் வேறு,நாம் வேறு' என்கிற தொனியில் ஒட்டாமல் தாமாகவே விலகிச் செல்லும் ஆட்களை நான் கண்டு இருக்கிறேன். ஒரு கோணத்தில் அவரவர் தொழில் சார்ந்து அறிமுகப்படுத்தப்படுவது கூட சாதியின் பெயரை சொல்லி கூப்பிடுவது போல் எனக்கு கூச்சமாக இருக்கிறது. பிழைப்புக்காக ஒருவன் செய்யும் தொழிலே அவனின் அடையாளம் ஆவது சரியாகாது. மனிதர்களின் இயல்பு,மனம்,குண நலன்கள்,செயல்பாடு,ஆர்வம் சார்ந்து குறிப்பிடப்பட்டால் நம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்ளவும்,அடையாளப்படுத்திக் கொள்ளவும் உதவும் என நான் கருதுகிறேன்.

Wednesday, May 18, 2011

மூளையை மயக்கும் போதையாக Ink Whitener


கடந்த மாதத்தில் ஒரு நாள் "வியாபாரம் எப்படி போகுது ?" என்று பேனா முதலான எழுதுபோருட்களின் விற்பனை முகவராக இருக்கும் நண்பனிடம் கேட்டேன்.

" ஸ்கூல் லீவ் விட்டுட்டாங்க .தேர்தல் நேரமா வேற இருக்கிறதால வியாபாரம் ரொம்ப டல். அதே நேரம் பேனா சேல்ஸ் கம்மியா இருந்தாலும் Whitener சேல்ஸ் குறையல. என்ன காரணம் தெரியுமா? இப்போ சில பசங்க அதுல இருக்கிற liquid (திரவம்) எடுத்து மூக்குல மோந்து பார்த்து போதை ஏறுறதுக்கு வாங்குறாங்க. கொஞ்ச நாளைக்கு முன்னாடி வடநாட்டு பசங்க தான் வாங்கிட்டு இருந்தாங்க. இப்போ விஷயம் தெரிஞ்சு நிறைய நம்ம பசங்களும் வாங்குறாங்க. ஒரு சில கடைக்காரன் ஏன் எதுக்குன்னு கேட்பான். எல்லாரும் அப்படி நல்லவனா இருப்பான்? வியாபாரம் ஓடினா போதும்னு நினைப்பான். பத்து ரூபாய்க்கு கூட கிடைக்கிறதால எல்லாரும் ஈசியா வாங்கிடுறாங்க. கம்பனிக்காரன் வந்து ஆர்டர் எடுத்திட்டு போறான்,நான் சப்ளை பண்றேன்.எனக்கே சில நேரம் கஷ்டமாத் தான் இருக்கு".


கல்விக்காக மற்றும் சில முக்கிய ஆவணங்களில் பேனாவில் தவறாக எழுதியதை அழிப்பதற்காக பயன்படுத்தப்பட வேண்டிய ஒரு பொருளுக்கு அரசு வரிச்சலுகையும் கொடுத்து மக்கள் இதுபோன்ற காரியங்களுக்கு பயன்படுத்தும்போது வேதனையே ஏற்படுகிறது. டாஸ்மாக் மட்டுமே நம் கண் முன் நிற்கும் போதையாக தெரிகிறது. ஆனால் இது வெறும் உடலை மட்டும் பாதிக்காமல் மூளையையும் செயலிழக்க வைக்கிறது.

இந்த பதிவுக்காக தொடர்புடைய படத்தை இணைக்க கூகுளில் தேடும்போது டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் வந்த செய்தியையும் காண நேர்ந்தது.
http://timesofindia.indiatimes.com/city/chennai/More-city-schoolchildren-get-hooked-to-whiteners/articleshow/7879731.cms(சென்னையில் மட்டும் பள்ளிப்பருவத்தில் உள்ள இருபது பேர்கள் இதனால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்)


http://m.timesofindia.com/PDATOI/articleshow/7536840.cms
(கோவையில் 25 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்)


ஜெல் பேனா வந்த பின்னர் நிறைய மாணவர்கள் 'ஜெல்' பேனாவை பயன்படுத்துகிறார்கள். ஆகையால் இந்த கணிப்பொறி காலத்தில் அரசாங்கம் தடை செய்யும் வரை காத்துக் கொண்டு இருக்காமல் பள்ளிகள் தாமாகவே முன்வந்து Whitener பயன்பாட்டை ஒழித்து விட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.

Wednesday, May 4, 2011

எங்கேயும் காமம்



நகரத்தின் நெரிசலான கடைவீதி ஒன்றில் அழகான இளம்பெண் தன் காதலனிடம், "நான் உன்னை எல்லாம் லவ் பண்றேன் தெரியுமா,எப்பவுமே உன் நினைப்பு தான்" என்று சொல்லி விட்டு தன் மார்பின் மேல் வைத்து அழுத்திக் கொண்டு கைபேசியை வைத்து 'என்னோட நெஞ்சு துடிப்புல உன் பேரு கேக்குதாடா,செல்லம்' என்று சுற்றி இருப்பவர்களைப் பற்றிய பிரக்ஞையே இல்லாமல் , ..ம்ம்... அந்த காதலர்களுக்கு வாழ்த்துக்கள். ஆனால் காதலை பொது இடங்களில் எப்படி எல்லாம் வெளிப்படுத்துகிறார்கள் பாருங்கள்!

இதைப்பற்றி நண்பனிடம் பேச்சுவாக்கில் கூறினேன்.

இதனை பொருட்படுத்தாமல் , "டேய்,இதெல்லாம் சும்மா. நான் போன வாரம் என்னோட பையனை கூப்பிட்டு படம் பார்க்க போனேன். கூட்டம் அதிகமாக இருக்கவும் மேல பாக்ஸ்க்கு போயிட்டேன். அங்க பார்த்தா,ஒரு நாலு ஜோடிடா. படம் ஆரம்பிச்ச உடனே அவங்க வேலைய ஆரம்பிச்சிட்டாங்க. சரி,இடைவேளை விட்டதுக்கு அப்புறம் போயிடுவாங்கன்னு பார்த்தா வெளிச்சம்னு கூட பார்க்காம ஒரு ஜோடி சீட் மேலேயே படுத்து ச்சே,என்னால பொறுக்க முடியாம ஏன்டா இங்க வந்து தொல்லை பண்றீங்க,இதுக்கு லாட்ஜுக்கு போக வேண்டியது தானனு சொன்னதுக்கு அப்புறம் அந்த ஜோடி எந்திரிச்சி போனாங்க .பார்த்தா காலேஜ் படிக்கிறவங்க மாதிரி தான் இருந்தது."

திரை அரங்குகளில், பேருந்து நிலையங்களில், பேருந்தில், புகைவண்டிகளில், பூங்காக்களில், கோயில்களில் , பிரவுசிங் சென்டர்களில், கடற்கரை ஓரங்களில் இது போன்று பிறர் கவனத்தை சிதைக்கும் நிகழ்வுகள் அதிகமாகவே நடக்கின்றன. காதல் என்பது ஒரு அற்புதமான உணர்வு. காமம் அதை விட மேலான மனிதனின் அடிப்படை உணர்ச்சி. அது தனிப்பட்ட,அந்தரங்கமான விசயம்.அதை பொது இடத்தில் செய்வது என்ன வகையான கலாச்சாரமோ ? பண்பாடோ? இப்படி ஒரு பக்கம் இருந்தாலும் பணம் வைத்து இருப்பவன்,பண்ணை வீட்டிலும் பெரிய ஹோட்டல்களிலும் உடல் தேவைகளுக்கு பெண்களை இழுத்துக் கொண்டு செல்கிறார்கள். மற்றவர்கள் எங்கு போவார்கள்? கைபேசி வந்த பின்னர் தொடர்பு கொள்ள முடிந்தாலும்,தனிமைக்கு புகலிடம் தேடி அலைகிறார்கள். இதற்கு மும்பை,புனே, கொல்கட்டா போல தனியாக விபச்சார விடுதிகளை இங்கும் வைத்து தொலைத்து விடலாம். யாருக்கு தெரியும்,குடிக்க டாஸ்மாக் தொடங்கிய அரசு ஒருநாள் இதற்கும் அனுமதி கொடுக்கலாம். என்ன கலைஞர் குடும்பம்,இதையும் ஒரு தொழிலாக எடுத்து செய்யாமல் இருந்தால் சரி.

Monday, May 2, 2011

பொறியியல் கல்வி - பொறியில் சிக்கிக் கொண்ட எலிகள்


"இன்ஜினியரிங்க விட்டா வேற படிப்பே இல்லையான்னே,எல்லாரும் அதிலேயே சேரச் சொல்றாங்க.எனக்கு பிடிக்கவே இல்லை.இதை படிச்சு சாப்ட்வேர் பீல்டுக்குத் தான் போகணும். என்னைய எதுக்கு பயோலஜி க்ரூப் சேர்த்து விட்டாங்க.கம்ப்யூட்டர் சயன்ஸ் படிச்சு இருந்தாவாது கொஞ்சம் நல்லா இருந்து இருக்கும்." என்று கேட்ட தங்கைக்கு பதில் சொல்ல இயலாமல் சிரித்து மழுப்ப மட்டும் தான் முடிந்தது.

80,90 களில் பொறியியல் படிக்க வேண்டும் என்ற ஆர்வமே எல்லோரிடமும் மேலோங்கி இருக்கும். நுழைவுத் தேர்வு,பொதுத் தேர்வில் 70% விழுக்காடுக்கு மேலே எடுத்தால் தான் கல்லூரிக்கு உள்ளே நுழைய முடியும். கடந்த பத்தாண்டு கால ஆட்சியாளர்களால் இன்று பனிரெண்டாம் வகுப்பில் தேர்வானாலே இடம் கிடைக்கும் என்ற நிலை வந்து விட்டது. அனைவருக்கும் கல்வி கிடைப்பது நல்ல விசயமே. ஆனால் எதார்த்தத்தில் தமிழ்நாட்டில் ஒரு சில பொறியியல் கல்லூரிகளைத் தவிர மற்ற கல்லூரிகளின் தரம் மிகவும் மோசமாக உள்ளது.பணத்தை புடுங்குவதில் மட்டும் எவரும் குறை வைப்பதில்லை.படிக்கும் பொறியியல் கல்வியும் ஆராய்ச்சிக்கு பயன்படாமல் அன்னிய நாடுகளுக்கு சேவை,உற்பத்தி,மென்பொருள் துறைக்கே பயன்படுகிறது.



இயற்பியல்,வேதியியல,கணிதம் படிப்பவர்கள் முனைவர் பட்டம் பெற்றால் தான் காலத்தை ஓட்ட முடியும் என ஆகி விட்ட காரணத்தால் கலை,அறிவியியல் கல்லூரிகள் காத்தாடுகின்றன. சட்டம் படிப்பவர்கள் செய்யும் கூத்தைக் கண்டு நான் வக்கீல் என்று வெளியில் சொல்ல கூட சிலர் யோசிக்கின்றனர்.மருத்துவம்,விவசாயம் சம்பந்தப்பட்ட கல்லூரிகள் பொறியியல் கல்லூரிகள் பெருத்த அளவுக்கு பெருகவில்லை.


இனி எல்.கே.ஜி. யில் இருந்து ஆங்கிலம் கற்பது போல் பொறியியல் கல்வியை கூட ஒரு பாடமாக வைத்து விடலாம் என்கிற அளவுக்கு பொறியியல் கல்லூரி மோகம் இன்றைய பெற்றோர்களிடம் இருக்கிறது.

பிழைக்க மட்டுமே கல்வி தேவை என்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டு பொறியியல் என்ற பொறியில் சிக்கிக் கொண்ட எலிகளாக நாம் இருக்கிறோம்.

சோறுக்குப் பதிலாக இரும்பை பொரியல் (பொறியியல்) போட்டு திங்கும் காலமும் வரலாம்!

Tuesday, April 26, 2011

மதுரை மாட்டுத்தாவணி - தூத்துக்குடி / வைகோ





வைகோ மற்றும் தூத்துக்குடி பகுதிகளை சேர்ந்தவர்களின் உணர்ச்சிவசப்படுதலுக்கும்,கோபத்திற்கும் இதுநாள் வரை காரணங்களை தேடிக்கொண்டு இருந்தேன். மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து தூத்துக்குடி வரை NH45B சாலையில் பேருந்தில் பயணிக்கும்போது ஓரளவுக்கு அதன் காரணங்களை அறிய முடிந்தது.

முள் காடுகள், பொட்டல் நிலங்கள், ஆங்காங்கே தென்படும் வீடுகள் என
மாட்டுத்தாவணியில் இருந்து தூத்துக்குடி வரை சாலையின் இரு பக்கமும் பார்க்கும் போது பாலைவனத்தில் தான் பயணிக்கிறோமோ என்ற எண்ணம் தோன்றுகிறது. அவ்வப்போது வீசும் காற்று கூட தகிக்கிறது. தரிசு நிலங்கள் மேம்பாடுகளுக்கு அரசாங்கம் என்ன செய்கிறது என்றே தெரியவில்லை. சில இடங்களில் வேப்ப மரங்களை நட்டு வைத்து இருப்பதை காண முடிந்தது.

இந்த மக்களின் வாழ்வாதாரம் என்னவாக இருக்கும்,எப்படி இந்த கரிசல் பூமியில் வாழ்கிறார்கள் என நினைக்கும் போது வியப்போடு வேதனையும் ஏற்படுகிறது. தமிழகத்தில் கல்வியறிவு பெற்றவர்களில் நான்காவது இடத்தை தூத்துக்குடி மாவட்டம் பெற்று இருக்கிறது. இந்த கல்வி அறிவைக் கொண்டு அங்கு பிழைக்க வழி இல்லாமல் வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.


இலவசம், கவர்ச்சி திட்டங்கள்,விவசாய நிலங்களில் பொருளாதார மண்டலங்கள், சென்னையை மையப்படுத்தியே தொழிற்சாலைகள் கொண்டு வரும் அரசாங்கம் தூத்துக்குடி,விருதுநகர்,ராமநா
தபுரம், சிவகங்கை மாவட்டங்கள் பாலைவனம் ஆவதை எப்படி கண்மூடி பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் என தெரியவில்லை. இதற்கும் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன்,கீதா ஜீவன் என அமைச்சர்கள் இருக்கும் மாவட்டங்கள் இவை. அனைத்துக்கும் மேலாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் வைகோவும் விளாத்திகுளத்தில் தான் இருக்கிறார்.

ஈழத் தமிழர், தமிழ் இனத்துக்காக போராடி இன்று ஒரு மூலையில் ஒடுங்கி இருக்கும் வைகோ தென் மாவட்டங்களை மையப்படுத்தி இங்கு இருக்கும் பிரச்சனைகளை முன் வைத்து அரசியல் செய்தால் தனக்கென ஒரு இடத்தை அவர் பிடிக்கலாம்.

சென்னை மாநகரம் வேறு பெருத்துக் கொண்டே போகிறது.
ஒரு வேளை ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் திருச்சிக்கு ஏதேனும் செய்ய வாய்ப்பு இருக்கிறது. கோவை,மதுரைக்கு எதுவும் செய்யக் கூடாது என தீர்மானம் எடுத்தவர்கள் போல ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்.தூத்துக்குடியில் துறைமுகம் இருப்பதால் கர்நாடகாவில் பெல்காமை இரண்டாம் தலைநகராக அறிவித்ததை போல இங்கும் செய்து,சில கட்டமைப்பு வசதிகளை செய்தால் இப்பகுதி மக்கள் பிழைத்துப் போவர்.

மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு,ஏதாவது பண்ணனும் பாஸ்!

ஒன்று + இரண்டு = முட்டை

"மாப்ள, என்னோட லேப்டாப்பை இந்த கடையில் வேலை பார்க்க கொடுத்து இருக்கேன். வாங்கிட்டு அப்புறம் சாப்பிட போயிறலாம்."


"மணி அண்ணன் இல்லைங்க, அவர் நாலு மணிக்கு மேல தான் வருவார்" என்று கடையில் இருந்த பையன் சொல்வதை கேட்டு வெற்றி கடுப்புடன் வெளியே வந்தான்.


"பொம்பளை முந்தானையை பிடிச்சவன் உருப்பட மாட்டான்" அப்படிங்கிறது சத்தியம் மாப்ளை. இந்த
மணி இருக்கானே. இவன் என் கூடத் தான் ஒண்ணா வேலை பார்த்தான்.சரியான மண்டை,நல்லா ப்ரோகிராம் எழுதுவான்.


அவனோட அத்தை பொண்ணு ஒருத்தி இருக்கா.
அவளுக்கு அப்பா,அம்மா இல்லாததால் அண்ணி கூட தங்கி
அவ காலேஜ் படிச்சுகிட்டு இருந்தா . அவளோட அண்ணன் வெளிநாட்டில இருக்கிறான். மணியும், ரேணுகாவும் லவ் பண்ணுனாங்க. லவ்ன்னா சொன்னா அது லவ் இல்லை,அவளுக்கு அரிப்பு, வயசுக்கோளாறு. இவனை நல்லா யூஸ் பண்ணிகிட்டா. இவனுக்கு சென்னை,பெங்களூர்னு எல்லா பக்கமும் நல்ல வேலை கிடைத்தது. இவ தான் அவனை வெளியே விடவே இல்லை.


அவ படிச்சு முடிச்ச கொஞ்ச நாளில் அவளுக்கு பெங்களூரில் வேலை கிடைத்து விட்டது. இவனையும் அங்கே வரச் சொல்லி ஒரே தொந்தரவு. இவன் ஒரு பத்து வருசமா இங்க கோயம்புத்தூர்லேயே குப்பை கொட்டி விட்டதால் உடனே பெங்களூர் போக முடியல. அவ மட்டும் மாசத்துக்கு ஒரு ரெண்டு வாட்டி வந்து இவனை உசுப்பேத்தி விட்டு போவா.



ஒரே வீட்டில இருக்கிறதால ரேணுகாவோட அண்ணிக்கு இந்த விஷயம் தெரிந்தே இருந்தது. ரேணுகா பெங்களூர் போனதும்,புருஷன் வெளிநாட்டில் இருப்பதும்,தினமும் பால் குடிச்ச பூனையான மணியும் தனியாக இருப்பதும் அவளுக்கு வசதியா போயி விட்டது. இவனை அண்ணி அவ வலையில் இழுத்து போட்டுட்டா. இவனாலும் மீற முடியல.





இப்போ ஒரு பிள்ளை வேற பிறந்து இருக்கு,அவ அண்ணிக்கு. அது ஏறக்குறைய இவன் சாயலிலே இருக்கு,மாப்ள. ரேணுகா கிட்ட மணியை விட்டுத் தர முடியாதுன்னு அண்ணிக்காரி சண்டை போட்டு விட்டா. அவளும் இப்போ தனியா பெங்களூரில் அழுதுகிட்டு இருக்கா. அவளுக்கும் இப்போ என்ன பண்றதுன்னே தெரியல.அண்ணன் கிட்ட சொன்னா,தன்னோட வண்டவாளமும் கப்பலேறிடும்னு அமைதியா இருக்கா. மணியும் ரேணுகாவோட அண்ணிக்கு குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் ரேணுகாவைத் தவிர்க்கிறான்.





மணியோட அப்பா,அம்மா கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி சொல்றாங்க.இவன் பிடி கொடுக்காம அலையுறான். இப்படி எத்தனை நாள் தான் இவன் பொழப்பு ஓடுமோ?




மணி நல்ல பையன்,மாப்ள. பாரு,இவளுக ரெண்டு பேர் பொச்சு அரிப்புக்காக ஒருத்தன் வாழ்க்கையை சீரழிச்சு விட்டாளுக. நமக்கெல்லாம் பிள்ளை குட்டிகனு பயம் இருக்கு. ஆனா பார், அவங்க வாழ்க்கையும் தான் ஓடுது.




கடைசியா ஒண்ணு சொல்கிறேன்,மாப்ள. "துணிமணினா இஸ்திரி போடணும், குஞ்சாமணினா ஸ்திரியை போடணும்" அவ்வளவு தான் வாழ்க்கை.

Tuesday, April 19, 2011

இது பிணங்களின் கதை - பப்புவா நியூ கினியா

ஆஸ்திரேலியாவுக்கு அருகில் இருக்கும் நாடான பாப்புவா நியூ கினியாவில் வேலை பார்த்து கொண்டு இருந்த ஒரு நாளில் என்னுடைய சொந்த ஊரில் நண்பர் ஒருவர் இறந்து விட்டார்.வேலைக்கு போகும் போது வண்டியை ஒட்டுபவனிடம் என்றும்போல இயல்பாக பேச முடியவில்லை.

அவன், "ஏன் செல்வன், இப்படி அமைதியா இருக்க? உடம்பு சரி இல்லையா? இல்லை,எதுவும் பிரச்சனையா?" என்று கேட்டான். அவனிடம் நடந்த விசயத்தை கூறினேன்.

"என்ன செல்வன், மனசை ரொம்ப குழப்பிக் கொள்ளாதே. இதெல்லாம் நம்ம கையில் இல்லை.நேற்று இரவு கூட என்னுடைய தம்பி இறந்து விட்டான். நம்ம இப்போ வேலைக்கு போற வழியில் வீட்டுல என்னோட பொண்டாட்டி கிட்ட காசு கொடுத்து அவளை என்னோட தம்பி வீட்டுக்கு போகச் சொல்லணும்."

"ரோய், என்ன சொல்ற? உன்னோட தம்பி இறந்திட்டானா? என்னாச்சு,எப்படி நடந்தது? நீ போகலையா?".

"செல்வன், உங்களுக்குத் தான் தெரியுமே. இங்க ஒரு கம்பெனியில் வேலை கிடைக்கிறதே பெரிசு. எனக்கு இன்னும் மூணு நாள் கழிச்சு தான் ஒய்வு நாள் வருது.தம்பி நேத்து காட்டுக்குள்ள விறகு வெட்ட போயி இருக்கான். அங்க ஒரு பப்புவாயன் ப்ளாக் பாம்பு இருக்கு. அது கடிச்சிடிச்சு. ரொம்ப விஷம் அது. அவன் விதி முடிந்தது."

"ச்சே.பாவம். என்னா வாழ்க்கை இது. அப்போ நீ உன் தம்பி பிணத்தை பார்க்க முடியாதுல? இதுக்கு கூட இல்லாமா எதுக்குப்பா வேலை பாக்கிற?".

"இல்லை,செல்வன். என்னோட தம்பி இங்க இருந்து 300 கிலோமீட்டர் தூரத்துல இருக்கான். இங்க மலை,காடுகள்ள போக்குவரத்து வசதி கிடையாது. எல்லாரும் போயி பார்க்க குறைஞ்சது பத்து நாள் ஆகும்,சொந்தக்காரங்க எல்லாரும் வருகிற வரைக்கும் பிணத்தை புதைக்க மாட்டோம்."

"பத்து நாளா? பரவாயில்லையே. எங்க நாட்டில செத்த அன்னைக்கே புதைத்து இல்லாட்டி எரித்து விடுவோம். அதுக்கு மேல விட்டா நாறிப் போயிடும்."

"என்னங்க செல்வன். இப்படி ஒரு மனுஷனுக்கு மரியாதை இல்லாம. சரி விடுங்க, அது உங்க ஊர் வழக்கம். போன வருஷம் எங்க சொந்தக்காரங்க வீட்டுல ஒருத்தர் இறந்திட்டார். அவரோட பையன் அமெரிக்காவில இருந்த இங்க வர ஒரு மாசம் ஆச்சு.அதுவரைக்கும் பிணத்தை பதப்படுத்தி வைத்து இருந்தோம்."

"நல்ல விஷயம் தான். ஆனா எங்க நாட்டில மக்கள் தொகை அதிகம்.இப்படிலாம் வச்சுகிட்டு இருக்க முடியாது.போக்குவரத்து வசதியும் நல்லா இருக்கு.என்னா ஒரு கஷ்டம், இது வெறும் சடங்கு போல் ஆகி விட்டது.இறந்த மனிதனை நினைத்துப் பார்க்கத் தான் ஆளும் இல்லை.,நேரமும் இல்லை."

இதற்கிடையில் அவன் வீடு வந்து விடவும் பொண்டாட்டியிடம் காசை கொடுத்து விட்டு வந்து பயணத்தைத் தொடர்ந்தோம். இடையில் ஒரு குகை வந்தது.

"செல்வன், இந்த குகை எனக்கு ரொம்ப விசேசமானது. எப்படி தெரியுமா? என்னுடைய முன்னோர்கள் இந்த குகையில் தான் வசித்து வந்தார்கள். உள்ளே திரியும் பாம்பு,பல்லி,பூச்சிகளை பிடித்து தின்பர். பயத்தால் வெளியே வர மாட்டார்கள். இறந்த பின்னர் அவர்கள் உடலை எடுத்து ஒரு மரத்தின் கிளையில் தொங்க விட்டு விடுவார்கள். ஒரு பத்து,பதினைந்து நாட்கள் கழித்து வெறும் எலும்புகளும் ,மண்டை ஓடும் கிடைக்கும். அந்த மண்டை ஓட்டை எடுத்து வைத்து எங்கள் முன்னோர்களை குல தெய்வமாக வழிபடுவோம். எல்லாமே நன்றாக போயிக் கொண்டு இருந்தது, இந்த ஆஸ்திரேலியாக்காரன் வரும் வரை. அவன் இந்த நாட்டில் புகுந்த பின்னர் பைபளின் இரண்டாம் வழிபாட்டின்படி இறந்தவர்களை வழிபடுவது குற்றமாக கருதப்பட்டது. 'இறந்தவர்கள் சாத்தானின் பிள்ளைகள்' எனவும் கூறினார். இவ்வாறு கூறி இங்கு இருந்த எங்கள் முன்னோர்களின் மண்டை ஓடுகளை அவர்கள் எடுத்து கொண்டு போயி அவர்கள் நாட்டில் வைத்து உள்ளார்கள். மக்களுக்கும் இங்கு கிறிஸ்தவ மதத்தை பரப்பி இந்த பழக்கத்தை ஒழித்து விட்டனர். ஆனால் இன்றும் கூட ஒரு சிலர் அரசாங்கத்துக்கு தெரியாமல் மண்டை ஓட்டை பாதுகாத்து வருகின்றனர். அவர்கள் நர மாமிசமும் சாப்பிடுகிறார்கள். உயிரோடுக்கு இருக்கும் இந்த கறுப்பு மனிதனுக்கே மதிப்பு இல்லை என்கிற போது என்னோட முப்பாட்டன்களுக்கு இந்த வெள்ளைக்கார நாய்களிடம் என்னமரியாதை கிடைக்கும்?.சரி விடுங்க. என்னோட கதைய உங்ககிட்ட சொல்லி உங்களை இன்னும் கஷ்டமாக்கிட்டேன் போல.உங்க ஊர்ல இந்து மதத்துல பழைய காலத்துல என்ன பண்ணுவாங்க?."

"தெரியல,ரோய். எங்க ஊர்லயும் குல தெய்வ வழிபாடு இருக்கு. ஆயிரக்கணக்கான தெய்வங்களும் இந்து மதத்தில் உண்டு. ஆனால் கிறிஸ்தவ மதம் இந்தியாவுக்கு வந்த பின்னர் இந்து மதத்திலும் ஒற்றைக் கடவுள் வழிபாடு என்று போயிக் கொண்டு இருக்கிறது. நான் அறிந்த வரையில் பிணங்களை புதைத்தும்,எரித்தும் தான் வந்து இருக்கிறோம். எகிப்தில் மம்மி செய்து வைத்து இருக்கிறார்கள். இந்தியாவிலும் இது போன்று எதுவும் வழக்கம் இருந்து இருக்கலாம். ஒரு வேளை புதைப்பது என்ற விசயமே இந்தியாவில் இருந்து தான் வந்து இருக்கும் என நான் நினைக்கிறேன்.ஆனாலும் தெளிவாகத் தெரியவில்லை."


"இன்னைக்கி செத்தா, அடுத்த நாள் புதைச்சு ,அதுக்கு அடுத்த நாளைக்கு பால்" என்று நான் சிறுவனாக இருக்கும் போது இருந்த வழக்கம் இப்போது செத்த அன்னைக்கே பாலை ஊத்தி வேலையை முடித்து விடுகிறோம் . மின்சாரத்தில் எரிக்கிறது வந்துவேலை இன்னும் எளிதாக போயி விட்டது.

பிணத்தின் கதை பழங்காலத்தில் என்னவாக இருந்து இருக்கும் ?".

Saturday, April 16, 2011

நாடி ஜோதிடம் / குறி ஜோதிடம்

கடவுள் என்ற வார்த்தையிலே நம்பிக்கை இல்லாதவனாகவும், ஜாதகம்,ஜோதிடம் போன்றவற்றில் இதுவரை ஆர்வம் காட்டாமலும் இருந்து வந்து இருக்கிறேன்.

இரண்டு நாளைக்கு முன்னர் நண்பன் ஒருவனுக்கு அவனுடைய தொழில், எதிர்காலம் பார்க்க நாடி ஜோதிடம் பார்க்கச் சென்றோம். போன இடத்தில் எனக்கும் நாடி பார்ப்பது என்று முடிவானது.

முதலில் நாடி சோதிடர், என்னுடைய கைரேகையை ஒரு வெள்ளைத் தாளில் பதிக்கச் சொன்னார். "சரி,தம்பி.நீங்க ஒரு பத்து நிமிஷம் இருங்க. நான் ஓலைச்சுவடியை தேடி எடுக்கணும்." என்று கூறிச் சென்றவர் ஒரு முப்பது நிமிடம் கழித்துத் தான் வந்தார்.

"நான் சொல்றதுக்கு சரியா இருந்தா சரி,தப்பா இருந்தா தப்புனு சொல்லுங்க" என்று கூறி விட்டு ஓலைச் சுவடியை எடுத்து மந்திரம் வாசிப்பது போல் வாசித்து ஒவ்வொரு கேள்விகளாக கேட்டார். பெயர்,அப்பா பெயர்,அம்மா பெயர்,வயது, பிறந்த நாள்,கிழமை என்று நாம் சரி என்று சொல்லும்வரை கூறிக்கொண்டே சென்றார். அந்த ஓலைச் சுவடி கட்டு தீரும் வரை என்னுடையது எதுவும் பொருந்தவில்லை. "சரிங்க. உங்க சுவடி இந்த கட்டுல இல்லை. வேற கட்டு எடுத்து வரேன்.பொறுங்க என்று சொல்லி விட்டு ஐந்து நிமிடத்தில் திரும்பி வந்தார். இந்த கட்டிலும் என்னை பற்றிய தகவல்கள் எதுவும் ஒத்து வரவில்லை.நேரம் ஆறரைக்கு மேல் ஆகி விட்டது. என் உடன் வந்தவன், "சில நேரம் ஒரு சில பேருக்கு சுவடி கிடைக்காதுயா. உன்னோட பேரு வேற வித்தியாசமானது. அந்த காலத்துல இருந்து இருக்குமா ,என்னமோ? " என ஏற்கனவே அவநம்பிக்கையில் இருந்த என்னை மேலும் நோக விட்டான்.

சரியாக பதினைந்து நிமிடங்கள் கழித்து வந்தவர்,2 ,3 சுவடிக்கு அடுத்து என்னுடைய பெயர்,அப்பா பெயர்,அம்மா பெயர்,ஊர்,வயது என சரியாக வரிசையில் சொல்ல ஆரம்பித்தார். என்னால் 'சரி' என்ற வார்த்தையைத் தவிர வேறு எதுவும் சொல்ல முடியவில்லை. ஜோதிடரும் இப்போது நம்பிக்கை வந்தவர் போல "தகவல் சரி தான ,அப்போ பொதுப் பலன் எழுத ஆரம்பித்து விடலாம்" என்று சொல்லிக்கொண்டே உற்சாகமாக நோட்டை எடுத்து எழுத ஆரம்பித்தார்.

அப்போது பொற்கால ஆட்சியின் சாதனையான மின்சாரத் தடை வந்ததால் எழுதுவது தடைபட்டது. நான்,ஜோதிடரிடம்" என் பெயருக்கு ஓலைச் சுவடி இருக்காதுன்னு நினைச்சேன். கிறிஸ்தவ ஆளுகளுக்கு எல்லாம் இருக்குமா? எப்படிங்க இதெல்லாம்?" என்று கேட்டேன்.

"தம்பி. இதெல்லாம் 500 ,1000 வருசங்களுக்கு முன்னர் ஞானிகள் எழுதி வைத்துப் போனது. உங்க பெயர் தமிழ்ப் பெயர் தானே. அதுனால எளிது தான். கிறிஸ்தவ பெயர் என்ன,வெள்ளைக்காரர்களுக்கு எல்லாம் எங்க அண்ணன் பார்க்கிறார். உச்சரிப்பு முறையில் வேண்டுமானால் வேறுபாடு இருக்கலாம். இங்கு இருந்து நிறைய ஒலைச் சுவடிகளை வெள்ளைக்காரன் எடுத்து போயிட்டான். "வானியல் ஜோதிடம்,அறிவியல் ஜோதிடம்" எல்லாம் இதைப் பார்த்து தான் அவன் ஆராய்ச்சியில இறங்குகிறான். பவர் வரட்டும். உங்க பெயர் சுவடியில இருக்கிறத காட்டுறேன்" என்று சொன்னார். இவ்வாறு பேசிக்கொண்டு இருக்கும்போதே மின்சாரம் வந்து விட்டது.

என்னை கூப்பிட்டு என்னுடைய பெயர்,அப்பா,அம்மா பெயர், ஊர் என என் தகவல்கள் எழுதப்பட்டு இருந்ததை காண்பித்தார். என்னால் அதைப் பார்த்து வாய் பேச முடியாமல் மெய் மறந்து நின்று விட்டேன். பொதுப்பலன் எழுதி விட்டு,அப்படியே திருமண காண்டமும் சேர்த்து எழுதி கொடுங்க என்று கேட்டேன்.

ஒரு அரை மணி நேரம் விடாமல் எழுதிக்கொண்டே இருந்தார். எழுதி முடித்து விட்ட பின்னர், "வாசிக்க தொடங்கலாமா?" என்று சொல்லி விட்டு குரு நாதர்,கடவுள் மந்திரங்களை சொல்லி விட்டு பலன்களை படிக்க ஆரம்பித்தார். அவர் கூறிய பொதுப்பலன்கள் எல்லாமே மிகச் சரியாக இருந்தது. திருமண காண்டம் வாசிக்கும் போது , இதுவரை ஏற்பட்ட திருமணத்தடைகளையும், காரணங்களையும் கூறினார். வரப்போகும் பெண்ணை பற்றி அவர் கூறியது தான் மிக ஆச்சரியமாக இருந்தது. பெண் பெயர் எத்தனை எழுத்து,குடும்பம்,உருவம்,சொத்து,குறைகள்,இடம்,ஊர்,மச்சம் என ஒவ்வொன்றாக கூறும் போது என்னால் நம்பாமல் இருக்க முடியவில்லை. இதெல்லாம் நடக்க வேண்டும் என்றால் தக்க பரிகாரம் செய்ய வேண்டும் என்று கூறி நிறைவு செய்தார்.

பத்து ஆண்டுகளுக்கு முன்னால் நான் கோவையில் படித்து கொண்டு இருக்கும் போது, ஒரு நாள் நாங்கள் தங்கி இருந்த விடுதியின் சமையல்காரர்,"செம்மலர்,எப்படி இருக்க" என்று கேட்டு விட்டு என் பதிலுக்கு கூட காத்து இருக்காமல் அதுவரை என் வாழ்வில் நடந்தவற்றையும்,குடும்பத்தைப் பற்றியும் ஒன்று விடாமல் கூறினார். இதை பக்கத்தில் இருந்த கேட்டு கொண்டு இருந்த நண்பர்கள் எங்களுக்கும் சொல்லுங்க என்று கேட்டதற்கு "குறி எல்லாம் அப்படி சொல்ல முடியாது. இன்று அவனுக்கு சொல்ல வேணும் என்று எழுதி இருக்கு" சொல்லி அங்கு நிற்காமல் கிளம்பி விட்டார். இதற்கும் நான் அவரிடம் தங்கி இருந்த இரண்டு வருடங்களில் ஒரு நாள் கூட பேசியது இல்லை.


கைரேகையை பார்த்து ஒருவர் பலன் சொல்வதும், பிறந்த நேரம் (ராசி,நட்சத்திரம்) பார்த்து சொல்வதும் எப்படி ஒருவருக்கு பொருந்திப் போகிறது? இந்த ஜோதிடம்,ஜாதகம் எல்லாம் உண்மை தானா? இதை நம்ப ஆரம்பித்தால் அவர்கள் சொல்லும் இறைவனுக்கு பரிகாரம் செய்ய வேண்டும். அப்பொழுது கடவுள் இருக்கிறாரா? அடுத்து நமக்கு என்ன நடக்கும் என நம்மாலே அறிய முடியாத போது சிலர் எதிர்கால பலன்களை கணிப்பது எப்படி?
செவ்வாய் கிரகம் இருக்கிறதை அந்த காலத்திலேயே எப்படி கண்டுபிடித்து இருக்கிறார்கள்?

எதை ந்மபுவது? எதை விடுவது?