Wednesday, February 23, 2011

ராஜி - ரோசலின்- நூர்ஜஹான்

'அக்கா,பஸ்க்கு நேரம் ஆகிடிச்சி, நான் கிளம்புறேன்க்கா' என்று சொல்லிக்கொண்டே நிக்க கூட நேரம் இல்லாமல் பஸ்சை பிடிக்க ஓடினாள் ராஜி. 'பார்த்து சூதானமா போயி,நல்லபடியா பரிட்சை எழுதிட்டு வாம்மா' என்று பன்னிரண்டாம் வகுப்பில் படிக்கும் இன்று கடைசித் தேர்வு எழுத ஓடும் தங்கையை பார்த்துக்கொண்டு நின்றாள் அக்காகாரி.



அம்மாவும்,அப்பாவும் மேலுலகம் போய் சேர்ந்த பின்னர் அக்கா தான் வளர்த்து வருகிறாள் ராஜியை. இன்னும் மேலே படித்து நல்ல வேலைக்குப் போக வேண்டும் என்ற ஆர்வத்தில் இரைச்சலுடன் செல்லும் பஸ்ஸில் கூட படிக்கிறாள் ராஜி. ஆனால அக்கா கணவனோ, இவள் பன்னெண்டாவது முடிச்ச உடனே அவன் சொந்தத்தில் இருக்கும் ஒருவனுக்கு கட்டி வைத்து விட வேண்டும் என்ற தீர்மானத்துடனே அலைகிறான். இவள் தான் பிடி கொடுக்காமல் மதர்ப்பாக திரிவதாக கருவிக்கொண்டு இருக்கிறான்.



அவள் ஊரில் இருந்து திண்டுக்கலுக்கு வேறு பஸ் இல்லாதால் காலை 7.30 மணிக்கெல்லாம் முதல் ஆளாக பள்ளிக்கூடத்துக்குள் நுழைந்தாள். இன்னும் கால் மணி நேரம் கழிச்சு தான் ரோசலின் வருவாள். பத்து நிமிடம் பொறுத்துப் பார்த்தாள். ரோசலின் வரும் பாட்டை காணோம். பசி உயிரை வாங்கியது. டிபன் பாக்சை திறந்து உள்ளே இருந்த இட்லியை வாயின் உள்ளே போடத் தொடங்கினாள். சாப்பிட்டு முடிச்சு விட்டு பாத்ரூம் வரை போயி வந்து படிக்கலாம் என்று நினைத்துக் கொண்டே பாத்ரூம் போனாள்.



மேலும் கீழும் பார்க்காமல் பாத்ரூம் பக்கத்தில் போய் விட்டாள். பாத்ரூமுக்கு உள்ளே நுழையும் முன்னே அவள் காலை ஏதோ இடறுவது போல பட்டது. என்னவென்று கீழே பார்த்தவளுக்கு அப்படியே தூக்கி வாரிப் போட்டது. உடல் முழுவதும் வியர்த்து கொட்டியது. அங்கே நிற்காமல், வந்த திசை நோக்கி பின் வாக்கில் ஒரே ஓட்டமாக ஓடத் தொடங்கினாள். அப்போது தூரத்தில் ரோசலினும், நூர்ஜஹனும் வருவது தெரிந்தது.



திக்கு திசை தெரியாமல் ஓடும் ராஜியை, ரோஸ்லின் நிறுத்தி "எங்கடி இப்படி தலை தெறிக்க ஓடுற, பேய் பிசாசு எதுவும் பார்த்தியாடி?" என்றாள். ஓடி வந்த திசையை நோக்கி ராஜி தலையைத் திருப்பி கையைக் காட்டினாள்.
"என்னாடி ,அங்க ? " என்று கேட்ட கேள்விக்கும் அவளிடமிருந்து பதில் இல்லை. அவளுக்கு மூச்சு நிற்பது மட்டும் இன்னும் நிற்கவில்லை.



"வாடி, அங்க போயி என்னானு பார்ப்போம்" என்று இவளை இழுத்துக்கொண்டு ரோசலினும், நூர்ஜஹனும் பாத்ரூமுக்கு பக்கத்தில் போனார்கள். பாத்ரூம் பக்கத்தில் நெருங்க நெருங்க, ஒரு ஆணின் பிறப்பு உறுப்பு மட்டும் கீழே கிடப்பதும் அதில் இருந்து ரத்தம் வடிந்து கொண்டு இருப்பதும் தெரிந்தது. இப்போது மூன்று பேருக்கும் பேச்சு வரவில்லை,தொண்டை வறண்டது.


ரோசலின் , "வாங்கடி,போயி சிஸ்டர் கிட்ட சொல்லிடலாம். ஏதோ பெரிய சிக்கல் மாதிரி தெரியுதுடி ".
நூர்ஜஹான் , "இது முஸ்லிம் பையனோடது இல்லை. எங்க பசங்கனா சுன்னத் பண்ணி இருப்பாங்க."
ராஜி,"ஆமாடி,இது தான் ரொம்ப முக்கியம் இப்போ. அந்த மொட்டச்சிக கிட்ட போனாலும் அது இதுனு நிறைய கேள்வி கேப்பாளுக. கமுக்கமா நம்ம பாட்டுக்கு எக்ஸாம் ஹால் கிட்ட போயிடுவோம். "



இந்தப் பெண்கள் இப்படி விவாதித்துக் கொண்டு இருக்கும்போது மற்ற பிள்ளைகள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டு இருந்தனர். கூட்டம் அதிகமாகி,வேடிக்கை பார்க்கத் தொடங்கினர். மற்ற பெண்களுக்கு இது விளையாட்டாகவும் , இந்த மூன்று பெண்களுக்கு வேதனையாகவும் இருந்தது அந்த சூழ்நிலை.


முதலில் கேட்டில் உள்ள வாட்ச்மேனிடம் விசயத்தை சொல்லலாம் என்றாள் ஒருத்தி,அதுக்கு இன்னொருத்தி, "அவன் ஆம்பளை. அவன்கிட்ட எப்படிடி போயி சொல்றது? ".இப்படி ஒவ்வொருத்தியும் ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டு இருக்க பரீட்சைக்கு நேரம் நெருங்கி கொண்டு இருந்தது. கடைசியில் எல்லாரும் ஒரே முடிவாக சிஸ்டர் கிட்ட போவது என முடிவெடுத்தனர். அதற்குள் எப்படியோ விஷயம் கசிந்து சிஸ்டரே வந்து விட்டார்கள்.



அவங்களும் வந்து கீழே கிடந்ததைப் பார்த்து விட்டு முதலில் முகத்தை சுளித்தனர். பின்னர் சுதாரித்துக்கொண்டு , "ச்சே,அசிங்கம்... ஏய், புள்ளைகளா! யாருப்பா, இதை முதலில் பார்த்தது? இது மட்டும் தான் கிடந்ததா? இல்லை வேறு எதுவும் பார்த்தீங்களா? இல்லை, ஆளுக வேற யாரும் இருந்தாங்களா? பாத்ரூமுக்குள்ள யாராவது போயிப் பார்த்தீங்களா?".


பேச்சு எதுவுமே வராமல் இந்த மூணு பிள்ளைகள் மட்டும் அழுவது போல நின்று கொண்டு இருந்தார்கள்.


பாத்ரூம் கிளீன் பண்ற பொம்பளைக கிட்ட சொன்னா தூக்கி எறிஞ்சிடும். ஆனா இது என்னா எழவுனு தெரியலியே? கொலை கேசா இருக்குமோ? இல்லை,நமக்கு கூட இருக்கிற சிஸ்டர்க பண்ணின வேலையா கூட இருக்குமோ?. எது எப்படி இருந்தாலும், இந்த விசயத்த மடத்தில எல்லாரிடத்தும் கேட்டுட்டு தான் எதுவும் செய்யணும். இல்லாட்டி எல்லாம் நம்ம தலையில விடிஞ்சிடும். இவ்வாறு பலவாறு யோசனையில் மூழ்கிய சிஸ்டர், பிள்ளைகள் எல்லாரும் அங்கே கூடி குசுகுசுவென பேசி கொண்டு இருப்பதை கண்டு கோபம் வந்தது.


முகத்தை கடுகடுப்புடன் வைத்துக்கொண்டு,"சரி,புள்ளைகளா, இங்க யாரும் நிக்க வேண்டாம். எல்லாரும் எக்ஸாம் ஹால் போங்க. நாங்க பார்த்துக்கிறோம்.".



மடத்தில் கன்னிமார்கள் அனைவரும் கூட்டம் நடத்தி பெண் போலிசை அழைப்பது என முடிவானது. போலீஸ் வரும்போது,அந்த மூணு பிள்ளைகளை மட்டும் கூப்பிட்டு விசாரிக்கலாம் என தீர்மானம் செய்து "சரி,நீங்க போயி பரிட்சை எழுதுங்கம்மா.போலீஸ் வந்தா கூப்பிட்டு விடுறோம்".இந்த பெண்கள் எதையும் ரிவிசன் பண்ணி படிக்க நேரம் இல்லாமல் இருந்ததால் மன குழப்பத்துடன் தேர்வு அறைக்குள் நுழைந்தனர்.



ராஜி ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து இருந்தாள். தூரத்தில் போலீஸ் வருவது போலத் தெரிந்தது. நம்மை வந்து கூப்பிடப் போகிறார்கள். என்ன கேப்பாங்கனு தெரியலையே? இது வரை குடி கொண்டு இருந்த அமைதிக்கு பங்கம் வந்து விட்டதே என மனதுக்குள் விசும்பினாள்.ஆனால் பரிட்சை முடியும் வரை யாரும் வந்து அவளை அழைத்துப் போகவில்லை.



போலீஸ் விசாரணைக்கு வந்து பாத்ரூமை நெருங்கும் நேரத்தில் எங்கோ இருந்து பறந்து வந்த ஒரு காக்கா வந்து அந்த குஞ்சை கவ்விச் சென்றது. காலையில் தவற விட்ட குஞ்சை மீண்டும் கைப்பிடித்த மகிழ்ச்சியில் விரைவாக பறந்து சென்றது.
இப்போது தான் போலீசுக்கும் மெதுவாக விளங்கத் தொடங்கியது. இந்த பள்ளிக்கூடத்துக்கு பக்கத்தில் இருக்கும் கவர்மென்ட் ஆஸ்பத்திரியில் காலையில் போஸ்ட் மார்ட்டம் பண்ணிய பாடியில் குஞ்சு காணாமல் போனது நினைவு வந்தது.


எது எப்படியோ இந்தச் செய்தி நாளைக்கு பேப்பரில் வந்து, மாநகரில் பள்ளிக்கு வர இருந்த கெட்ட பெயர் அதன் சுவடே தெரியாமல் மறைந்து போனதால் போன உயிர் திரும்பி வந்தது போல் இருந்தது கன்னிமார்களுக்கு.


பரிட்சை முடிந்ததும் எவளையும் பார்க்காமல் நேராக பஸ் ஏறி வீட்டுக்கு வந்து விட்டாள்,ராஜி. அக்கா வீட்டுக்காரன் பார்த்து வைத்த மாப்பிளையை மறுபேச்சின்றி கட்டிகொண்டாள். இவள் எப்படி கல்யாணத்துக்கு ஒத்துக்கொண்டாள் என்று தான் அக்காளுக்குத் தான் இதுவரை புலப்படவில்லை.

Monday, February 14, 2011

ஒரு மடல்

வணக்கத்துக்குரிய தெய்வத்திரு ஆலமுத்து மூப்பனார் அவர்களுக்கு உங்களது கொள்ளுப்பேரன் செம்மலர் செல்வன் எழுதிக்கொள்வது.

என்னைய நீயோ, உன்னை நானோ பார்த்ததோ இல்லை. ஆனாலும் உனக்கு எத்தனையோ மகன்,மகள்,மருமக,பேரன்,பேத்தி இருக்குஇருக்கும்போது என் மேல மட்டும் உனக்கு ஏன் இவ்வளவு பாசம்? Why it's only to me great grandpa? உன் பேரைத் தான் எனக்கு முதலில் வைக்கணும்னு சொன்னாங்களாம். நான் உன் பேரை வைக்காத கோவமா உனக்கு? நேத்து வீட்டுல சொன்னாங்க, ஒரு ஜோசியம் பாக்கிறவன் சொன்னானாம், நீ பண்ணின பாவம் தான் என்னையப் பிடிச்சு ஆட்டுதுன்னு. நீ முதலில் கட்டி வந்த பொண்டாட்டிய வீட்டை விட்டு துரத்திட்டியாம். அவனவன் நாலஞ்சு பொண்டாட்டி கட்டி வாழ்ந்த காலத்துல இதெல்லாம் ஒரு தப்பாடானு வியாக்கியானம் பேசாத, நீ ! நீ என்னா பாவம் பண்ணினனு என்னையவே கேக்காத, நீ!
எந்த காலமா இருந்தாலும் பெண் பாவம் பொல்லாதது ,பெரிசு. உன் தம்பிக்கும் கூட கல்யாணம் பண்ணி வைக்காமா பொறுப்பு இல்லாம இருந்து இருக்க, நீ!

சரி விடு , இதெல்லாம் பழைய கதை! உன்னைப் பத்தி யார் என்ன சொன்னாலும் எனக்குத் தான் வருத்தமா இருக்கு. உன் மேல பழியைச் சுமத்தின அந்த ஜோசியக்காரனை நான் பார்த்துக்கிறேன், நீ சும்மா பீல் பண்ணாத, நான் தான் இருக்கேன்ல! i love you , Great Grandpa!

சீக்கிரம் நேரில் சந்திப்போம் !

அதுவரை பாசத்துடன்,
உனது செல்லப் பேரன் ஆலமுத்து / (செம்மலர் செல்வன்)