Friday, October 28, 2011

துரத்தும் நிழல்கள்

ஒரு இனிமையான மாலை நேரத்தில் ரெஸ்டாரன்ட் ஒன்றில் நீங்களும்,உங்கள் காதலியும் தேநீரை  உறிஞ்சிக் கொண்டு பேசக் கூட தோன்றாமல் வெகு நேரமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள். அவளை பார்க்காத இந்த இரண்டு,மூன்று வருடங்களும் போனிலும்,சாட்டிலும் பேசி தீர்த்து விட்டதால் அவளை பார்த்துக்  கொண்டு இருப்பதே பேரானந்தமாக இருந்தது. அந்த நேரத்தில் உங்களுக்கு இடையில் ஒருவன் வந்து "இவ ரொம்ப அழகா இருக்காள்ல" என்று உங்களிடம் கேட்டால் எப்படி இருக்கும்? எனக்கும் அப்படித் தான் கோபம் பொத்துக் கொண்டு வந்து அவனை அடிக்கப் போனேன். ஓங்கிய கையை பிடித்துக் கொண்டு என் காதலியைப் பார்த்து அவன் கேட்டான். "நியாயமா பார்த்தா எனக்கு வர வேண்டிய ஆத்திரம் இவனுக்கு ஏன் வருது,யாருக்குடி நீ பொண்டாட்டி? ". எனக்கு இரண்டு மூஞ்சியையும் நேரில் பார்க்கும் தைரியம் இல்லாமல் போயி என்ன செய்வதென்று விழித்தேன். 


இதன் பிறகு எனக்கு என்ன நேர்ந்தது என்று நீங்கள் மூளையை கசக்குவதை விட அடுத்த நாள் காலை செய்தித் தாள்களில் அவர்கள் இருவரும் இறந்து போனதாய் வந்து இருந்த செய்தியை நீங்கள் படித்து இருக்கலாம். போலீஸ் மட்டுமல்ல ஏன் நீங்களும் கூட குப்புறப்படுத்துக் கொண்டு யோசிக்கலாம். ஏனென்றால் நானும் இப்பொழுது அதைத் தான் செய்து கொண்டு இருக்கிறேன். இவன் கனவுகளை காவு கொடுத்தவன் !

Friday, October 14, 2011

உடையும் பிம்பங்கள்

எதையும் சட்டை செய்யாமல் அலட்சியத்துடன் நோக்கும் மனப்போக்கால் என்னுடன் உறவாட முடியாத துயரத்துடன் இரண்டு கைபேசிகளும் செயலிழந்து கிடைக்கின்றன. காதலியோ,மனைவியோ ஏன் தோழி கூட இல்லாமல்  தனியனாய் இருப்பதை நான் உணராத அளவுக்கு இயல்பில் நடத்தி வைத்துக் கொண்டு இருந்தவை இவையே. பண மதிப்பினை விட இத்தனை ஆண்டுகளாக சேர்த்து வைத்து இருந்த தொடர்புகளை தேடிக் கண்டுபிடிக்க வேண்டுமே என்ற எண்ணமே பெரும் வேதனையை உண்டாக்கிக் கொண்டு இருக்கிறது.

வீட்டில் விசயத்தை இரண்டு நாள் சொல்லாமல் தள்ளிப் போட்டாலும் பேசும்போது உண்மையை சொல்லி விடும் படி ஆகி விட்டது. "சரி விடுப்பா, தலைக்கு வந்தது.தலைப்பாகையோடு போச்சுன்னு நினைச்சுக்க. ஜோசியக்காரன்  வேற உனக்கு ஏற்கனவே தண்ணியில கண்டம் இருக்குன்னு சொல்லி இருக்கான்.வேலைக்கு போற பக்கம் பார்த்து சூதானமா இருக்கணும்" என்ற அம்மாவின் அக்கறையான பாச வார்த்தைகளில் மன பாரம் லேசாக இறங்கியது போல இருந்தது.

பசித்தாலும் பசிக்க விட்டாலும் நேரம் தரும் உந்துதலும்,நண்பர்களின் நச்சரிப்பும் சாப்பாட்டு கடை நோக்கி நகர வைத்தது. சாப்பிட்டு எந்திரிக்கும்போது பெல்ட் பக்கிள் உடைந்து கீழே விழுந்தது. எதன் மீது இருந்த கோபமோ சாப்பாட்டின் பக்கம் திரும்பி இருப்பது தெரிந்தது.

பெல்ட்டு போனது செல்போனை நினைக்கையில் ஒன்றுமில்லாமல் தோன்றியது. உண்ட மயக்கத்தில் தூங்கி எழுந்த நேரத்தில் தேய்க்க கொடுத்து  இருந்த துணிகளை வாங்க லாண்டரி கடையை  நோக்கி செல்ல வேண்டி இருந்தது. கடையை நெருங்கும் முன் செருப்பு பிய்ந்து விழுந்தது. இழுத்துக் கொண்டே கடை வரை சென்று விட்டேன்.

"பாய் சாப், கப்டா கராப் கொகயா..ஆப் சாந்தி கரோ..மேய் பைசா தேதேகா".

எத்தனையோ போய் விட்டது. இந்த ஒரு சட்டைக்கு இவரிடம் பணம் வாங்கியா நமக்கு நிறையப் போகிறது என்கிற நினைப்பில்"முஸ்கில் நகி பாய்,டிகே" என்று சொல்லி விட்டு நடையைக் கட்டினேன். 

செல்லை விடுவோம்,அது என்னுடைய கொழுப்பு. ஏன் நன்றாக இருந்த மத்த மூன்றும் சொல்லி வைத்தது போல ஒரே நாளில் இப்படி ஆகிப்போனது? நான் தொலைந்து கொண்டு இருப்பதாக எனக்கு தோன்றியது இப்பொழுது நிஜமாகவே நடக்கத் தொடங்கி இருக்கிறதா?

புதியதாக ஒரு செல்லை வாங்குவதற்குள்  குழப்பங்களும்,அலைச்சலும்,கிண்டலும் கேலியுமாக மூன்று,நான்கு  நாட்கள் கடந்து போய் இருந்தது. எவருடைய தொடர்புகள் இல்லாமல் போய் இடைப்பட்ட நாட்களில் என்னை அழைத்து இருந்தவர்கள் பற்றிய ஒன்றன் பின் ஒன்றாக செய்திகள் வரத் தொடங்கி இருந்தது. தெரிந்தவர்களிடம் உடனடியாக பேசி விட்டு +22 கண்ட்ரி கோட் உடன்  வந்த நம்பர்  யாராக இருக்கும் என்று யோசிக்கையில் தான்சானியாவில் இருக்கும் வெங்கட்டாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டே கூப்பிட்டேன்.

"சலாம் அலைக்கும் சாதிக்,கேபாலக்.அனா அப்துல்லாஹ்."

"ஜேன்,தமாம்..மாபி மாலும் அரபிக்... கேன் யூ ஸ்பீக் இன் இங்க்லீஷ் "

"ஓகே. நோ ப்ராப்ளம்... ஆர் யூ முஸ்லிம்?"

"நோ."

"என் நண்பனே,உன்னைக்  கொல்வதற்காக ரெண்டு ஆண்களும்,ஒரு பெண்ணும் தீவிரமாக அலைந்து கொண்டு இருக்கின்றனர். இது எனக்கு எப்படி தெரியும் என்று கேட்காதே. கடவுள் தான் நம் இருவருக்குள் ஒரு வித பிணைப்பை உருவாக்கி இருக்கிறார். நீ பிழைக்க வேண்டும் என்றால் சொல்,நான் உனக்கு உதவ தயாராக இருக்கிறேன். முதலில் போய் பசியில் இருக்கும் ஒருவனுக்கு ரொட்டி ஒன்றை கொடுத்து விட்டு வந்து அப்புறம் என்னிடம் பேசு." என்று சொல்லி  போனை வைத்து விட்டான்.

ஒரு மணி நேரம் கழித்து அவனிடம் பேச முயற்சித்த போது இணைப்பு கிடைக்கவில்லை.

 லாட்டரி அடித்து இருக்கிறது,பணம் தருகிறோம்.இப்போது பணம் கொடு என்று தான் ஏமாற்றுவார்கள். இது என்னங்கடா, புதியதாக உயிரைப் பற்றி எல்லாம் பேசுகிறார்கள் என்று நண்பர்களிடம் புலம்பத் தொடங்கி இருந்தேன். " நீ எல்லாம் எதுக்கு உயிரோட இருக்க,பேசாம செத்து போயிடு" என்று சாதாரணமாக நண்பன் சொல்வது கூட அன்று பயத்தை இன்னும் அதிகப்படுத்தி விட்டது.


கார் 120 கிலோமீட்டர் வேகத்தில் சென்று கொண்டு இருக்கிறது. சுழன்று அடிக்கும் புழுதிப் புயலால் முந்தியோ,கடந்து செல்லும் வாகனங்களையோ,வானுயுர நிமிர்ந்து நிற்கும் கட்டிடங்களையோ காண முடியாமல் அருகில் இருப்பவர்கள் புலம்பிக் கொண்டு இருக்கின்றனர்.மழை வருவது போல இருக்கிறது.

என்னை மறைத்து இருக்கும் கண்ணாடியின் வழியாக நீ கை அழைத்து கூப்பிடுவது என்னால் காண முடிகிறது. 
ரேவதி,ரேவ்,ரேவி,ரே,... ம்ம், இன்னும் எப்படி அழைத்தால் உனக்கு கேட்கும்? நேற்றைய தூக்கமற்ற இரவு  கூட  உன்னையும் என்னையும் பற்றிய கேள்விகளால் நீண்டு கொண்டே இருந்தது. நீயும் நானும் கவிதைகளாய் பேசியது எல்லாம் இன்று வெறும் புனைகதைகளாய் மட்டுமே உலாவித் திரிகிறது. உனக்கு அது காதையாகவும்,எனக்கு மிகப் பெரும் வாதையாகவும் இருக்கிறது.

இனிமேல் எதையும் இழக்கும் அளவுக்கு எனக்கு மன திடம் இல்லை.என் இதயமும் கண்ணாடியால் ஆனது. எவ்வளவு கடினமாக தோற்றம் அளிக்கிறதோ அதற்கு எதிர்ப்பதமாக  மிக எளிதில் நொறுங்கக்  கூடியது. ஆகவே கண்ணாடியைக் கடப்பது ஒன்றும் எனக்கு பெரிய விஷயம் இல்லை. 

கண்ணாடி உடையும் போது அதன் பிம்பங்களாக  நானும் வீழ்கிறேன். சாலையில் என்னுடைய உடம்பில் இருந்து இரத்தம் ஆறாக வழிந்து ஓடிக் கொண்டு இருக்கிறது. என் மேல் சில கண்ணாடி துண்டுகள் சிதறிக் கிடக்கின்றன. செத்த காக்கையை சுற்றி மற்ற காகங்கள் வட்டமிடுவதை போல சுற்றி இருப்பவர்கள்  கண்ணீர் வடிக்கின்றனர். இதை காண சகியாமல் தூரத்தில் நின்று கொண்டு அழுகும் அந்த ஆப்ரிக்கனை தேற்றத் தான் யாரும் இல்லை. ஏன் நானும் கூட இல்லாமல் போனேன் ! ! !