Saturday, September 3, 2011

என்னால் ஆவதோ,அழிவதோ ஒன்றுமில்லை !

விமானம் இன்னும் இரண்டு மணி நேரம் கழித்துத் தான் கிளம்பும் என்ற அறிவிப்பினால் வந்த எரிச்சலும் கூட இதுவரை பட்ட பாட்டை நினைக்கும் போது ஒன்றும் பெரியதாக தோன்றவில்லை. அங்குமிங்கும் பராக்கு கூட பார்க்கத் தோன்றாமல் நாற்காலியில் சாய்ந்து கிடந்தேன். தனக்கு பின்னால் இருப்பவர் யாரோ தன்னை உற்றுக் கவனிப்பது போன்ற உள்ளுணர்வு எந்த பின் நோக்கி திரும்பி பார்த்தேன்.  கன்னியாஸ்திரி சீருடையில் ஒரு 25-30 வயது தோற்றம் உடைய தென்னிந்திய சாயலில் இருக்கும் ஒரு பெண் அமர்ந்து இருந்தார்.


நான் திரும்பி பார்த்ததை கண்டு விட்ட அப்பெண் “ஏங்க நீங்க தமிழா?” 


“ஆமாங்க,நான் தமிழ்நாடு தான். சொந்த ஊர் திண்டுக்கல்.  ஆமா,நீங்க எந்த ஊர்?”  


“எனக்கு சென்னை தான் சொந்த ஊர். நீங்க போனில் பேசிக்கிட்டு இருந்ததை வச்சு நீங்க தமிழாத் தான் இருப்பீங்கனு நெனச்சுத் தான் கூப்பிட்டேன். திண்டுக்கலா,எனக்கு நல்லாத் தெரியும். அங்க இருக்கிற பெஸ்கி காலேஜுக்கு நான் வந்து இருக்கேன். எனக்கு பிடிச்ச ஊர்.”


“ஓ,அப்படிங்களா,ரொம்ப சந்தோசம்.இந்த ஊர்ல எவ்ளோ நாளா இருக்கீங்க?”


”நான் இங்க 5 வருசமா இருக்கேன். எங்க சபை மூலமா அனுப்பி வச்சாங்க. என்னை மாதிரி இங்க இன்னும் பத்து பேரு இருக்காங்க.ஸ்கூல் மூலமா பசங்களுக்கு பாடம் நடத்துறோம். நீங்க எவ்ளோ நாளா இங்க இருக்கீங்க?”
“5 வருசமா? ஊர் பக்கம் போகவே இல்லையா? இங்க கம்பெனி வேலை விசயமா வந்து இரண்டு மாசம் இருக்கவே பயங்கர கடியா இருக்கு.நீங்க பெரிய ஆள் தான்.”
“ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமாத் தான் இருந்தது. அப்புறம் இதுவே எங்களுக்கு பழகிடிச்சு. ஸ்கூலில் பசங்க கிட்ட இருக்கும்போது அப்புறம் நாங்க பத்து பேரும் வேற மொத்தமா இருக்கிறதால ஒண்ணும் தெரியல.5 வருஷம் இப்படியே ஒடிடிச்சு.”
“ஓ,ஓகே.. அந்த அளவுக்கு பரவாயில்லை. ஊருக்கு போயிட்டு மறுபடியும் வருவீங்களா?இல்லை தமிழ்நாடு தானா?”
“இல்ல,இனிமேல் தமிழ்நாடு தான்.அனேகமா சபையில இன்னும்  மேலே  படிக்க வைப்பாங்க.”
எதிர்பார்த்ததை விட விரைவாகவே விமானம் வந்து விட்டது.ஒவ்வொருவராக விமானத்தின் உள்ளே செல்லத் தொடங்கினர்.”சரிங்க,பார்ப்போம்” என்று சொல்லி விடைபெற்றுக் கொண்டேன்.
விமானத்தின் உள்ளே இருவரும் வேறு வேறான இடங்களில் அமர்ந்து இருந்ததால் பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை. சரி,சிங்கப்பூரில் இறங்கும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து கொண்டு உறங்கி விட்டேன்.  சிங்கப்பூரில் இறங்கிய பின் நண்பனுடன் போனில் பேசிக் கொண்டு இருந்த முனைப்பில் அந்தப் பெண்ணை தவற விட்டு விட்டேன். அப்பெண்ணோ சென்னை செல்ல வேண்டியவர்.நான் சிங்கப்பூரில் உள்ள நண்பன் வீட்டுக்கு வேறு செல்ல வேண்டும். சரி அவ்ளோ தான் இனி எங்கு போய் பிடிப்பது,பார்ப்பது?
நிறைவுறாத பேச்சுக்களால் ஆறு மாத காலம் கடந்து இருந்தாலும் இன்னும் அப்பெண் என் மனதிலே வந்து போயிக் கொண்டு இருக்கிறார். எதை சாதிக்க,நிறுவிட,துறந்து விட  இந்தப் பெண் இப்படி வீட்டை விட்டு வந்து 5 ஆண்டு காலமாய் இங்கு இருக்கிறார்? எது அவரை இங்கு துரத்தி இருக்கும்? இப்போது அந்த பெண்ணின் மீது மரியாதை வருவதற்கு பதிலாய் ஒரு வித இரக்கமும்,வேதனையுமே மட்டுமே இருக்கிறது.
இன்று காலை அதிசயமாய் நண்பன் ஒருவனிடம் இருந்து மெயில் வந்து இருக்கிறது. “சாரிடா மாப்ள,எனக்கு திடீரென கல்யாணம் முடிவு செஞ்சுட்டாங்க.பத்திரிக்கை அடிக்கலாம் நேரம் இல்லை.பொண்ணு போட்டா அனுப்பி இருக்கேன்,பார். பார்த்திட்டு சொல்றா,உன்னோட சிஸ்டர் எப்படி இருக்காங்ன்னு...  ஆஸ்திரேலியாவில அஞ்சு வருஷம் வேலை பார்த்து இருக்காங்க. ஆனா இனிமேல் வீட்டில் இங்க தான்.”
அந்தப் போட்டாவைப் பார்த்த பின்னர் இன்னும் சில ஆண்டுகளுக்கு இருவரையும் நேரில் சந்தித்து விடக் கூடாது என்று மட்டும் மனதில் நினைத்துக் கொண்டேன். என்னால் ஆவதோ,அழிவதோ ஒன்றுமில்லை !



6 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சரிதான்...

rajamelaiyur said...

நல்ல சிறுகதை

செம்மலர் செல்வன் said...

நன்றி,கவிதை வீதி சவுந்தர் !

செம்மலர் செல்வன் said...

நன்றி,என் பாட்டை ராஜா !

Rathnavel Natarajan said...

நல்ல கதை.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_29.html

செம்மலர் செல்வன் said...

நன்றி ,அய்யா..